March 18, 2018

ஒரு காதல் வந்துச்சோ (நாடகம் - பகுதி 6)



காட்சி 7

( இரண்டு மாதங்களுக்குப் பிறகு)

( விஜியும் சுசீலாவும் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கிறார்கள்.)

விஜி: சுசீ... சுசீலாஆ........

(சுசீலா காதில் வாங்கவில்லை, ஏதோ சிந்தனையில் இருக்கிறாள்)

விஜி: சுசீஈஈ.....என்ன ஆச்சு உனக்கு. எனிதிங் ராங்க். ரொம்ப டல்லா இருக்க.

சுசீலா: ஒண்ணும் இல்லையே . தூக்கம் கம்மி, எக்ஸாம் வருதில்ல.

விஜி: காலையில கதிர் கால் பண்ணினான்.

சுசீலா: இவ்ளோ காலையில அவன் ஏன் உனக்கு கால் பண்றான்?

விஜி: உன்னை அவன் வீட்டுக்கு வர சொன்னான்

சுசீலா: என் நம்பர் அவன் கிட்ட இருக்கே..... நீ என்ன நடுவில? எத்தனை 
மணிக்கு வர சொன்னான்?

விஜி: இடியட்! சொல்றத மட்டும் கேளு. ஈவினிங்க் ஆறு மணி.

சுசீலா: ஓஹோ என்ன விஷயம்?

விஜி: எனக்கென்ன தெரியும். நீயே போய் பாரு.

(விழி பிதிங்கிக் கொண்டு, நிறை மாத கர்பிணியைப் போல பேருந்து வந்து 
மூச்சிரைத்து நிற்கிறது. விஜி, சுசீலா உட்பட மேலும் பத்து பேர் கசங்கிக் கொண்டு 
ஏறிய பின், அலுப்புடன் நகர்கிறது)


காட்சி 8

(இடம்: ஏபிசி காலனி. சுசீலா வீடு.
நேரம்: மாலை 4.30

[ சுசீலா புத்தகம் படிப்பதாக டபாய்த்துக் கொண்டிருக்கிறாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்று ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. 
"உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு" இப்படிக்கு - நவீன்


அவ்வபோது செல் ஃபோனை முறைத்து பார்ப்பதும்,
தனக்குள் முணுமுணுப்பதுமாக இருக்கிறாள். ]


(கொஞ்சம் நாட்களாகவே சுசீ ஃபோனைப் பார்த்து சிரிப்பதும்,
திடீரென உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்வதும் நெருடலாகவே இருக்க 
மங்களம் கவலையாகிறாள். )


(சபேசன் நுழைகிறார்)

சபேசன்: என்னடா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட?

மங்களம்: அதைத்தான் நானும் யோசிச்சிட்டிருக்கேன். சுசீ ரெண்டு நாளாகவே ரொம்ப 
டல்லாக இருக்கியே

சுசீலா: ஆமாம்ப்பா கடைசி கிளாஸ் இல்லை.

வினோத்: கட் அடிச்சுட்டு வந்திருப்பா. ஹி ஹி'

சுசீலா: நான் உன்ன மாதிரியா!

மங்களம்: என்ன சுசீ. ஏன் டல்லா இருக்க?

சுசீலா: இல்லைம்மா டையர்ட்னஸ். எக்ஸாம்னா சும்மாவா? படிக்க வேணாம்?

வினோத்: நான் ஒரு சூப்பர் ஐடியா சொல்றேன். நைசா ரோல் நம்பர மாத்தி எழுதிக் 
குடுத்துடு.  ரிசல்ட் வரும் போது, 'நான் எழுதினேனே, எப்படி என் ரிசல்ட் வர்லைன்னு 
சொல்லி தப்பிச்சுகலாம்'


சபேசன்: எப்படிடா இப்படி க்ரிமினல் புத்தி ஓடுது உனக்கு?

வினோத்: உங்க பையனாச்சேப்பா!

மங்களம்: ஏங்க, நீங்களும் இப்படி தில்லுமுல்லு பண்ணிதான் இஞ்சினியரானீங்களா?

சபேசன்: வர வர யாருக்கும் மரியாதையில்லாம போச்சு.

சுசீலா: எல்லாரும் என்ன நிம்மதியா தனியா இருக்க விடுங்க ரொம்ப போர் 
அடிச்சா டி.வி பாருங்க. இன்னிக்கு வினோத் கலந்துக்கற ப்ரோக்ராம் இருக்கு. 

மங்களம்(அதிர்ச்சியுடன்): என்னது? எந்த சானல்?


சுசீலா(அலட்சியமாய்): நேஷனல் ஜியாக்ரபிக்.

சபேசன்(சிரித்தபடி ): தன் வினை தன்னைச் சுடும்.

வினோத்: ராட்சசி, உனக்கு போய் ஐடியா குடுத்தேன் பாரு. நல்லா கஷ்டப்பட்டு 
படிச்சு... ஃபெயிலாகு.

சுசீலா: பெரீஈஈய முனிவரு... சாபம் குடுக்கறாரு. சரிதான் போடா.

மங்களம்: இன்னிக்கு பஜ்ஜி, சொஜ்ஜி செஞ்சிருக்கேன். எல்லாரும் சாப்பிட்டு அப்புறமா
சண்டை போடுங்க. குப்புவத்தான் வர விடாம செஞ்சுட்டீங்க. நாமளானும் பஜ்ஜி 
சொஜ்ஜி திங்கலாம்.


சபேசன்(கிண்டலாக): பஜ்ஜி சொஜ்ஜிக்காக குப்பு வரணமா? நாங்களே சாப்டுடறோம்.
வினோத்: ஆமா அது என்ன பஜ்ஜி செஞ்சா சொஜ்ஜியும் சேர்த்து செய்யணமா? 
கேசரி செஞ்சா என்ன?

சுசீலா: லூசு! கேசரிக்கு பேரு தான் சொஜ்ஜி.

மங்களம்: அதாவது பஜ்ஜி செஞ்சா, அது கூட எது வேணா செய்யலாம். 
சொஜ்ஜி தான் செய்யணம்னு இல்லை.

வினோத்: பின்ன எதுக்கு?

மங்களம்: எல்லாம் ஒரு ரைமிங்க்காக தான்.

சபேசன்: சவுண்ட் எஃபெக்ட் டா

(எல்லோரும் பஜ்ஜி சாப்பிடச் செல்கிறார்கள்)

(தொடரும்) 

No comments:

Post a Comment