December 30, 2011

கடவுள், இருப்புநிலை மற்றும் stephen hawking




மனிதனின் உயரிய இலக்கு தன்னிலை அறிதல் என்று கூறப்படுகிறது. இதனையொட்டியே ஆன்மீகம், நம்பிக்கை, தேடல், புரிதல், ஜபம் தபம் என அனைத்தும் ஏற்பட்டுள்ளது.  எக்காலத்திலும் பிறப்பு இறப்பை தாண்டிய புரியாத விஷயங்கள் இருப்பதாக நம்பிக்கை இருப்பது போல், நம்பிக்கை அற்றவர்களும் இருந்திருக்கிறார்கள்.

கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வியை இரண்டு விதமாய் அணுகலாம்.


 கடவுளை (personal or unexplained force) நம்புபவர்களாக இருப்பவர்களை ஆத்திகர்கள் என கொண்டாலும் நாத்திகவாதிகளில் இரண்டு பார்வைகள் உண்டு என நான் நினைக்கிறேன்.

கடவுள் என தனிப்பட்ட கூட்டம்/உருவகம் இல்லை என்று நினைப்பவர்கள். அனைத்தும் இயற்கை என்ற cosmological action எனக்கருதி அதன் விளங்க்கங்களாகவே அனைத்தையும் கண்டு எனவே கடவுள் என ஒரு விஷயம் தேவை இல்லை என்று வாதம் செய்பவர்கள். ஆனால் இக்கருத்தினை உடைய சிலர், இருப்பு நிலை என்ற  consciousness மேல்நம்பிக்கை உண்டு. அதனால் இவர்களும் ஏறக்குறைய அத்வைத சித்தாந்தத்தில் அல்லது பௌத மத கோட்பாடுகள் பாதி நம்பிக்கை கொண்டவர்களாக சித்தரிக்கலாம். மதம் சார்ந்த விஷயங்கள் மட்டுமே பிடிக்காமல் போனவர்களாக இருப்பவர்களும் உண்டு. இவர்களெல்லாம் ஏறக்குறைய பாதி ஆத்திகவாதிகள் என நான் நினைக்கிறேன்.

இன்னொரு வகை உண்டு. இப்படிப்பட்டவர்கள் தாம், "உண்மையான நாத்திகவாதிகள்" அதாவது "இருப்பே/soul/conciousness" இல்லை என நம்புபவர்கள். இவர் தரப்பு வாதங்களில் சில

1. Miracles are hallucinations. 
அற்புதங்கள் என்பது மனதின் பிரமையே

2. OBE are not personally verified and / or gimmicks to promote popularity

உடல் சாராமல் உலகை உணர்வது சாத்திய‌மற்றது. இப்படிப்பட்ட கருத்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட முடியாதது


3. (Straight from the horse's  mouth, i.e stephen hawkins) "I regard the brain as a computer which will stop working when its components fail. There is no heaven or afterlife for broken down computers; that is a fairy story for people afraid of the dark"
மனித உடல் (மூளை) என்பது ஒரு உயிர் வேதி தகவமைப்பு [Adaptive bio chemical machine] உபகரணம். இதன் மூலப் பொருள்கள் பழுது பட்டால்,முடிந்ததும் வாழ்வு முடிகிறது.மறுமை வாழ்வு கிடையாது


4. Brain is responsible conciousness.
மூளையி(னா)ல்தான் உணர்தல் ஏற்படுகிறது

5. When anything out of the ordinary happens, they club it as "mass hypnotism"
இயற்கை விதிகளுக்கு முரணான் ஒன்றை நம்புவதற்கு மன [மயக்க]மே காரணம்

6. பஞ்சபூதங்களின் கூட்டால் விளைந்ததே "இருப்பு நிலை" அந்த கூட்டமைப்பு கலையும் பொழுது இருப்பு நிலை என்ற consciousness  இல்லாமல் கரைந்து விடும்.  when elements dissolve, consciousness dissolves into airy nothing.  ஆன்மா,  soul, போன்றவற்றை மறுக்கின்றனர்.



எல்லாவற்றிற்கும் அவர்கள் தரப்பு மறுப்பை வைத்திருக்கிறார்கள்.


ஆரோக்கியமான விவாதமாக இதை கொண்டு செல்ல ஆசை.... தொடருங்களேன்...உங்கள் ஒவ்வொருவரின்

1. கருத்து
2. பார்வை
3. தெரிந்த, அனுபவித்த விஷயங்கள்,
4. ஆச்சாரியர்கள் , குருக்கள், ஸ்வாமிகள் பற்றிய நல் விஷயங்கள்
5. நாத்திகத்தின் கேள்விகள், சுட்டிகள்
6.  நிரூபிக்கப்பட்ட பொய் சாமியார்கள் பற்றிய தகவல் பரிமாற்றம், சுட்டி
7. carl sagan, முதல் ஐன்ஸ்டீன், stephen hawking போன்றவர்கள் கூற்று / அதன் சுட்டி....
9. உங்களுக்கு தெரிந்த அறிவியல், அணுவியல்,  அனுபவம் சார்ந்த விஷயங்கள்..
10. நம்பிக்கைகள்..
11. குட்டிக் குட்டி தகவல்கள்....
12. சும்மா கலந்து கொண்டு தெரிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோர்

13. பெரிய பெரிய விளக்கங்கள்.....
14. பழைய சித்தாந்த விளங்க்கங்கள்



எல்லாரும் வாருங்கள்....
எல்லாமே கொண்டு வாருங்கள்..... 

தொடர்ந்து பதில் விவாதம் வைய்யுங்கள்.....ஆங்கில சுட்டி, விவாதம், ஆங்கிலம் கலந்த விவாதமும் வரவேற்கப்படுகின்றன.

ஒவ்வொருவரின் கருத்தும் வேறு யாருக்கேனும் வழிகாட்டியாய் பார்வையாய், ஞானமாய், உண்மையின் உணர்ந்தலாய் இருக்கக்கூடும்.... நீண்ட ஆரோக்கியமான கருத்து பரிமாற்றமாகத் தொடர்ந்தால் மகிழ்வேன்.... பிறரின் கருத்துக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பு கொடுத்து உங்கள் கருத்தை தொடரலாம்.

இறுதியாக,...."வெளியே தேடாமல், வீண்விவாதம் செய்யாமல், உள்ளே தேடுவதே வழி" என்ற தெரிந்தாலும், இந்த விவாதம் எதுவரை செல்லும், அல்லது புதிய தகவல்கள் கொடுக்கும் என்ற ஆர்வத்தில் நான் இருக்கிறேன்...

December 26, 2011

அரசனாக மட்டும் வாழ்ந்த ராமன்




ராமனின் நிலை அரச குலத்தில் பிறந்த நீதி வழுவாத மன்னனின் நிலையாய் இருக்கிறது. விபீஷணன் சரணாகதி அடைகிறான். விபீஷணன் உத்தமமான தம்பியாக செயல்படவில்லை "இவனை நம்பலாமா" என்று கேள்வியை எழுப்புகின்றனர். அதற்கு ராமன், "எல்லா சகோதரர்களும் பரதனைப் போல் இருப்பதில்லை, எல்லா பிள்ளைகளும் என்னைப் போலும் இருப்பதில்லை" என்கிறார்.  விபீஷனனுக்கு ராஜ்ஜியத்தின் மேல் ஆசை வந்ததாக கருதும் ராமன், 'ஒருவனுக்கு உயர்வு வந்தால் மாற்றானுக்கு அதுவும் உறவினனுக்குப் பொறுக்காது'  என்று கூறுகிறார்.


சொல்லக்கூடிய அளவு உயரிய பண்பு அல்லாதவனான விபீஷணனை ராமன் ஏன் காப்பாற்ற வெண்டும் என்ற வினா எழும். அதற்கும் அவரேவிளக்கம் கூறுவதாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. "சரணாகதி என்று வந்தவன் தவறியவனே ஆனாலும், காப்பாற்றுவது என் தர்மம்" என்கிறார். இதை அரசன் சொன்னதாகவும் கொள்ளலாம், மேன்மையான இறைவனுக்குறிய குணங்கள் கொண்ட மனிதன் கூறியதாகவும் ஏற்றுக்கொள்ளலாம். இறைவன் கூறியதாக ஏற்றுக்கொள்ளல் கடினம் ஏனென்றால் ராமனுக்கு தான் இறையின் அம்சம் என்றெல்லாம் எண்ணம் இருந்ததாக கூறப்படவில்லை. அனைவரும் நினைவூட்டினாலும் அவர் மனிதனாகவே தன்னை எண்ணி வாழ்ந்ததாகவே குறிப்பு இருக்கிறது.

ராமன் மனிதனுக்குறிய குணங்கள் பெற்றிருந்தான் என்பதற்கு சீதையின் அக்னிப்ரவேசம் முதலியவை சான்று.  பொதுமக்களை மனதில் கொண்டு, சீதையை தன் பல்லக்கில் ஏற்ற மறுத்த ராமன்,  சீதையை களங்கமுள்ள சரித்திரம் கொண்டவளாகவும், இனி அவள் வேறு யாருடனும் தன் வாழ்வை தொடரலாம் என்றெல்லாம் கடுமையாக பேசுவதாக குறிப்பு உள்ளது. அதன் பின் சீதா அக்னி பிரவேசம் செய்ய, அக்னி தேவன் அவள் கற்புக்கு சான்று சொன்ன பிறகு, தனக்கு அவள் கற்பின் தன்மை தெரியும், உலகறியச் செய்யவே இந்தச் சம்பவம் என்று ராமன் சொல்கிறார். எனினும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சீதையை சாடியிருக்கிறார் என்றே குறிப்பு கூறுகிறது.

இது தொடர்கதையானதும், எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பத்ரன் என்ற அரசாங்க அலுவலன், நகர்வலம் வந்த பின் கொணர்ந்த செய்தியில், மக்கள் ராமன் சீதையை ஏற்றுக்கொண்டதை பற்றி அவதூராக பேசியதாக தயங்கியவாறே சொல்கிறான். உடனே லக்ஷ்மணனைக் கொண்டு சீதையை கங்கைக்கரையில் விட்டு வரச் சொல்லி அனுப்புகிறார். ரிஷிகள் ஆசிரமத்துக்கு செல்ல அவளுக்கு பிரியம் இருப்பதை நினைவுறுத்தி அழைத்து செல்ல ஆணையிடுகிறார். சீதாவுக்கு தான் எதற்காக சென்று கொண்டிருக்கிறோம் என்ற நிலைமையே புரியாதது மிகக் கொடுமை. கங்கைக்கரையில் அவளுக்கு உண்மை தெரியவந்ததும் கதறுகிறாள். தன் சேலை விலக்கி வயிற்றை காட்டி "நான் முன்னமே கர்பமுற்றவள் இங்கு வந்து கர்பமுற்றதாக உன் தமயன் நினைக்க வேண்டாம்" என்று அலறுகிறாள். லக்ஷ்மணன் துடித்துப் போகிறான்.

லவனும் குசனும் ராமன் சபையேறி பாடல் பாடிய பின்னர் ராமன் இறுதியாக சீதையை கண்ட போதும் கூட, வால்மீகி முனிவர் "சீதா களங்கமுள்ளவளென்றால் நான் செய்த தபஸ் எல்லாம் வீணாக கலைந்து போகும்" என்று ராமனிடம் கூறுகிறார். அப்பொழுதும் ராமன் ஊரறிய சபதம் செய்ய வேண்டுமாய் கேட்க, சீதை பூமி மாதாவை தன்னை ரக்ஷிக்குமாறு  வேண்டுகிறாள். பூமியைப் பிளந்து சிம்மான்சனம் எழுந்து வர, உள்ளே அமிழ்ந்துவிடுகிறாள் சீதா. அதை கண்ணுற்ற ராமன் கதறுகிறார்.

இதையெல்லாம் ராஜநீதிக்கு உட்பட்டதாக எடுத்துக்கொள்ளலாம். ராஜாவின் மனைவி சிறந்த உதாரணமாக, களங்கத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டிய கடமையில் தள்ளப்படுகிறாள். ஊரறிய நிரூபிப்பதும் பிரஜையின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து தன் விருப்பு வெறுப்பை தள்ளிப் போடுவதுமான ராஜ தர்மம்.   சுய வாழ்கையில் இழுக்கு வராமல்   கவனித்துக் கொண்டாலன்றி  பிரஜைகளுக்கு ராஜாவின் மேல் மரியாதையும் ஒப்புதலும் பிறக்காது. ஊரின் நன்மைகாக தனிமனித ஆசாபாசங்கள் விட்டுவிட வேண்டிய கட்டாயம் என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப சமாதானம் செய்துகொள்ளலாம்.


(சோவின் எங்கே பிராமணன் குறிப்பிலிருந்து தொகுக்கப்பட்டது)


இதை  தொகுத்த பின்பு எனக்கு ஒன்றே ஒன்று தோன்றுகிறது. இறைவி என்பதால் அல்ல, பெண் எனபதால் அல்ல, பெண்ணுக்கு மட்டுமே கற்பு சொந்தமா என்ற  வாதத்தில் நான் இறங்கி நேரம் விரையமாக்க விரும்பவில்லை.    ஆனால் ஒரு மனுஷ ஜன்மாவாக...பாவம் சீதா :(



December 20, 2011

நாளை வெறும் கனவு





நாளை முதல்....
உறுதியாகத் தான் இருக்கிறேன்
கோபம் கூடாது
காபி இனி கிடையாது
சோம்பல் ஆகாது
விட்டு விட வேண்டும்
உடற்பயிற்சி தியானம் மட்டும்
உடன் வர வேண்டும்.
இறுதியாகவே எண்ணிவிட்டேன்
நேற்றைய பிரச்சனை
இன்று தொடர்வதில்லை
நாளைய நடப்பு
நிச்சயமாய் தெரிவதில்லை.
அறுதியான முடிவு தான்
மதுவருந்தல் முறையல்ல
கக்கும் புகையால்
கழியாது கவலை
நாளை முதல்...
உறுதியாகத் தான் இருக்கிறேன்.
இன்று ஒரு நாள் மட்டும்....
முடங்கும் சபதங்களுக்குப் புரிவதில்லை
நாளை பிறக்கும்போதே
இன்றாகிப் போகிறதே!

December 18, 2011

வலைச்சரத்தில் நான்

அனைவருக்கும் வணக்கம்.


இவ்வார வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கிறேன்.
வலைச்சரத்தில் என் பதிவுகளைப் படித்து உங்கள் மேலான கருத்தினையும் ஊக்கத்தினையும் அளித்தால் மகிழ்வேன்.
http://blogintamil.blogspot.com/


நன்றி.
அன்புடன்,
ஷக்திப்ரபா

December 13, 2011

வாடா மலரே...தமிழ்த்தேனே!



திரும்பப் படிக்கும் போதெல்லாம்
வேவ்வேறு வண்ணத்தில்
புதுசு புதுசாய் உணர்வுகளைத் தூண்டுகிறது
தூசி படிந்த நம் காதல் கவிதைகள்..
இன்று பிறந்தது போல்
விரியும் காதல் பரிமாணங்கள்.
தவறு உன்னுடையது.
சரி ஒப்புக்கொள்கிறேன்..
உனை இன்னமும் நினைத்து உருகும்
என்னுடையது.
இல்லையில்லை
ஒரு வேளை தமிழ்மொழியின்
தனிச்சிறப்பாக இருக்கலாம்.

December 03, 2011

கைகேயி (ஒரு அலசல்)










('எங்கே பிராமணன்' தொகுப்பைச் சார்ந்து எழுதிய பதிவு)




தசரதர், இராமன் பிரிந்து சென்றதும் மயங்கிச் சரிகிறார். பலரும் துயர் தாளாமல் புலம்புகின்றனர்.. சுமந்திரர் கோபம் மேலிட 'குலம் நாசம் செய்யப் பிறந்தவள்,கணவனை கொன்ற பாவம் உன்னைச் சேரும்' என்றெல்லாம் சுடுசொல்லால் தாக்கி, அவளது தாயைக் கொண்டு பிறந்திருப்பதாக சாடுகிறார்.



கைகேயியின் பூர்வீகம் ஆராய்ந்தால், அவளது தாயின் குணத்தோடு கைகேயியை ஒப்பிட முடிகிறது.ஏழு சகோதரர்களின் மத்தியில் ஒரே மகளாய் வளர்ந்தவள் கைகேயி. அன்னையின் அன்பைக் கண்டறியாதவள்.மந்தரா என்ற பணிப்பெண் தான் அவளது வளர்ப்புத் தாய். பிடிவாதக்காரி. கைகேயியின் தாயாரை நாடு கடத்தியிருந்தார் அவளது தந்தை. தனது தந்தையின் செய்கையினால் ஆண் வர்கத்தின் மேல் பெரிதும் நம்பிக்கையற்றவளாக இருந்திருக்கிறாள் என்றும் கோணமும் ஆராயப்பட்டிருக்கிறது. தனது மகன்/சந்ததிமற்றும் தனது பாதுகாப்பைக் கருதி அவள் நடவேடிக்கை இருந்திருக்கலாம். மேலும் கேட்பார் போதனையினால்தன் சுயசிந்தனையை எளிதில் துறந்துவிடக் கூடியவளாக வர்ணிக்கப்படுகிறாள்.



கோசலநாட்டுடன் தோழமை பூண்டிருந்த மன்னன் அஸ்வபதி. அவன் மகள் கைகேயி. அஸ்வபதி பறவைகளின் மொழியை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தான். இந்த விசேஷ சக்தி மூலம்அவன் தெரிந்து கொள்ளும் விஷயங்களை வேறொருவரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாது. இன்னொருவரிடம் இதனை சிலாகித்துக் கொள்ள நேர்ந்தால், அவன் உயிருக்கே பங்கம் விளைந்து விடும். ஒரு முறை தம் மனைவியுடன் சோலையில் உலா வரும் நேரம், உறவில் சுகித்திருந்த இரு அன்னப்பறவைகளின் பேச்சை கேட்க நேர்ந்தது. அவை பேசிக்கொண்டதைக் கேட்டு பெரிதும் ரசித்தும் சிரித்தும் மகிழ்ந்தான். இதை கண்ணுற்ற அவன் மனைவி அவை என்ன பேசின என்பதை தன்னிடம் கூறுமாறு வற்புறுத்துகிறாள். தனது உயிருக்கு ஆபத்தாய் விளையும் என்று அஸ்வபதி எடுத்துக் கூறியதை பெரிதும் பொருட்படுத்தாமல், பறவைகள் பேசிய விஷயங்களைதன்னுடன் பகிர்ந்து கொள்ள துளைக்கிறாள். கணவனின் உயிரையும் பொருட்படுத்தாத மனைவி என்றுணர்ந்த அஸ்வபதி அவளின் பெற்றோர்கள் வீட்டுக்கே அனுப்பி நாடு கடத்தி விடுகிறான்.



ராஜ்ஜியத்தை தன் மகள் வயிற்றுப் பிள்ளைக்கே கொடுக்கவேண்டுமென தசரதரிடம் சத்தியம் வாங்கிய பின்னரே திருமணத்திற்குச் சம்மதிக்கிறான் அஸ்வபதி. தசரதரும் தனக்கு இது காறும் கௌசல்யாவின் மூலமாக குழந்தை பிறக்காததை எண்ணி அவ்வாறு சத்தியம் செய்து தருகிறார். (இது ஒன்றை மட்டும் கவனம் கொண்டால் அவள் கேட்டசத்தியத்தில் பெரிய தவறிருப்பதாகத் தோன்றாது, தனக்கு வேண்டிய போது சத்தியம் செய்து கொடுத்து பின்னர்அவளை இகழ்ந்திருக்கிறார் தசரதர் என்றால், இரு பக்கமும் யோசித்து we can rest the case) அதன் பின்னரும் புத்திர பாக்கியம் இல்லாததால், மகத நாட்டு இளாவரசி சுமித்ராவை மணக்கிறார்.அழகில் சிறந்தவளான கைகேயியின் வீரத்திற்கும் பஞ்சமில்லை. தேவாஸுர சங்க்ரமத்தில் அவருக்கு தேரோட்டும் சாரதியாக விளங்கினாள். தக்க சமயத்தில் சிறப்பாக தேரைச் செலுத்தி தசரதர் உயிரைக் காப்பாற்றியதன் கைமாறாக இரண்டு வரங்களை அளிக்கிறார் தசரதர். முதலில் மறுத்த கைகேயி தனக்கு தேவை ஏற்பட்டால் பின்னர் கேட்பதாக கூறுகிறாள். இவ்வாறு இரண்டு வழியிலும் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு பரதனுக்கு முடிசூட்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார் தசரதர்.



கணவனின் நலனைக் கருதாத தன் காரியத்தில் கண்ணாய் இருக்கும் குணம் கைகேயிக்கு தன் தாயினிடமிருந்தே வந்த்து என சாடுகிறார் சுமந்திரர். பொறுமையின் சிகரமாய் விளங்கும் வசிஷ்டரும் கூட சினங்கொண்டு நிந்திக்கிறார்.புத்திர பாசத்தால் கட்டுண்ட தசரதர், ராமனின் பின் ஓடுகிறார். இதையறிந்த ராமர் தேரை இன்னும் வேகமாகசெலுத்த ஆணையிட்டு தசரதரின் பார்வையிலிருந்து மறைகிறார். ஆற்றாமையின் பிடியில் சிக்கிய தசரதர் 'விதவைக் கோலத்தில் நீ நன்கு ஆட்சியை அனுபவிப்பாய். அப்படியே உன் மகன் இந்த ராஜ்ஜியத்தை ஏற்றானாகில்அவன் செய்யும் ஈமக்கடனும் தன்னைச் சேராது' என்று புலம்புகிறார். கணவன் புலம்பும் போதும்கைகேயி தன் செய்கையை நினைந்து வருந்தியோ மனம் இளகியோ இரங்கி வரவில்லை.


கௌசல்யா தசரதரின் மேல் பழி சுமத்தி தன் மகனைகாட்டுக்கு அனுப்பியதாக கண்ணீர் சிந்த, எல்லோரையும் விட அறிவில் சிறந்தவளான சுமித்ரா, 'ராமன் சாமன்யன் அல்லன், சூரியனுக்குச் சூரியனானவன், அக்னிக்கே நெருப்பின் ஜுவாலையை தரக்கூடியவன், பெருமைக்கு பெருமை, தெய்வத்தின் தெய்வம், அவனுக்கு கெடுதல் விளைவிக்க எவராலும் முடியாது' என்கிறாள்.



இத்தனை நடந்த பின்னும் தசரதரின் உடல் உயிர் சுமந்து கொண்டுதானிருக்கிறது. அவருக்கு வாய்த்த சாபத்தின் படி புத்திர சோகத்தை பூர்த்தியாய் அனுபவித்த பின்னர் உயிர் பிரிய நேரிடவேண்டும் என்பது விதி. தன் சாபத்தை நினைவு கூர்ந்து தனக்கு ஏற்பட்ட சாபம் இதென்று அறிந்து மருகிறார். மறுநாள் காலை அவர் எழுந்திருக்கவில்லை. தூக்கத்திலேயே உயிர் பிரிந்துவிடுகிறது.



அதன் பின்னர் பரதன் வரும் பொழுதும் பரதனை அரசாளச் சொல்லி கேட்கிறாள் என்றால் கணவனின் இறப்போ பிறரின் நிந்தனையோ அவளை பெரிதும் பாதிக்கவில்லை என்றாகிறது. தன் செயலில் குறியாய் இருக்கும்சுயநலமிக்கவளாகவும் பிடிவாத குணம் கொண்டவளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள் கைகேயி.

November 24, 2011

Why this கொலவெறி....?!





சங்ககாலமெல்லாம் நமக்குப் புரியவே புரியாது. அதை ஒதுக்கி வைத்து விடுவோம். 'கம்பன், வள்ளுவன் பாரதி' என்ற வரிசைகளையும் விட்டுவிடுவோம்.

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே



என்றெல்லாம் பாடல்கள் எழுதிய கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். பாடலில் மேலோட்டமான கருத்து, அதனைத் தாண்டிய இன்னொன்றும்,அதற்குப் பின்னும் தோண்டித் துழாவினால் வேறொன்றும் பொக்கிஷம் போல் பொங்கிக் கொண்டிருக்கும்.



புரட்சிக் கவிஞர்கள் என்று பெயர் பெற்றவர்களும், தங்கள் நோக்கத்திலிருந்து சற்றும் வழுவாது உயர்ந்த எண்ணங்களை முன் வைத்த சுதந்திரப் போராட்ட கவிஞர்களும் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவரவர் காலத்திற்கேற்ற சூழ்நிலையில் பாட்டு புனைந்தாலும், காலத்தை வென்ற பாடல்களாக அவை திகழ்கின்றன.



கவித்துவத்தில் அடுத்த கட்டமாக, ரசனையை முன் வைத்து, உவமை, உவமேயம் மூலம் கற்பனையூற்றிக் கவிதை புனைந்த கட்டமும் அழகு. இப்படிக் கூட அழகாய் சிந்தனை விரியுமா என்று பாராட்ட தூண்டும் எண்ணங்கள், வார்த்தைக் கோர்வைகள். இப்படிப்பட்ட வரிகளைக் கேட்கும் பொழுது, புனைந்த கவிஞரே நம் மனத்திரையில் கவிதையாகிப் போவதுண்டு.


எல்லா காலகட்டத்திலும், கவிதை வேறு திரைப்படத்திற்கு பாடல் எழுதுவது வேறு என்ற அளவில் பார்க்கப்பட்டது.சிறந்த கவிதைத் தொகுப்பாக கவிஞர்கள் கொணர்வது திரைக்கு சரிவராத எழுத்தாக அமைந்துவிடுகிறது. காலத்தின் சுழற்சியில் சற்றே மாறுபட்ட தோற்றம் கொண்டு இப்பொழுதும் சில பாடல்கள் அவ்வாறு அமைகிறது. வேற்று மொழியும், நடைமுறையில் இருக்கும் வார்த்தைகளைக் கோர்த்து அதற்கு ராகம் உருவேற்றி சமைத்து விடுகிறார்கள்.

கலாரசனை, சொற்களையும் அதன் சந்தங்களையும் ரசித்து சுவைப்பதற்கு யாருக்கு நேரமோ பொறுமையோ இருக்கிறது? அதிகம் யோசிக்கத் தேவையற்ற வார்த்தைகளை சேகரித்தால் mass reach சுலபமாகிவிடுகிறது.


"Why this கொலவெறி கொலவெறி கொலவெறி டி...." எத்தனை சுலபமாக முடிந்து விட்டது பாருங்கள்! யதார்த்தமான சூழ்நிலைக்கு அமைந்த பாடல், மெட்டு, அதனால் ஒன்றிவிட முடிகிறது .


இதுவெல்லாம் தமிழா? கவிதையா? என்று பட்டிமன்ற பேச்சுக்கள் நேர விரயம். திரைப்படங்களோ, அல்லது இசைதொகுப்புக்களோ, கவிதைகளின் தொகுப்பாக மட்டுமே இருக்க வெண்டும் என்ற எண்ணம் குறுகியது. பட்டித் தொட்டிப் பாடல்கள், கிராமிய மணம் சிந்தும் மெட்டுக்கள், நகர வாழ்வின் பிரதிபலிப்புகள் எனப் பாடல்கள் பலவகை இருப்பதை ஒப்புக் கொண்டு வழிவிடுவோம்.


யதார்த்த பேச்சுக்களை நடைமுறைகளை பிரதிபலுக்கும் திரைப்படம், பாடல்கள், எழுத்து, கதை, கவிதை, நாடகம் போன்றவை முதலிடம் பெற்றுவிடுகின்றன. என்னதான் மூக்கை சிந்தி நின்றாலும் இலக்கியம் இலக்கணம் எல்லாம் அதற்கு அப்புறம் தான்.


இணையத்தை அதிகம் வலம் வருவது இளைய தலைமுறை என்பதால் Soup song மற்றும் flop song இங்கே top song ஆகி விட்டது. அவ்வளவு சுயபச்சாதாபமா இளைஞர்களுக்கு?



(இதைப் பற்றிய செய்தி கீழே)




http://www.thehindu.com/arts/cinema/article2650957.ece


சில படைப்புகள் நீண்டு நிரப்பி பல காலம் ஒளிவிடும் நட்சத்திரங்கள். வேறு சிலது, சில மணித் துளிகள் பளீரென மின்னி மறையும் மின்மினிப்பூச்சிகள்.


இணையம், யூட்யூப், கூகுள் போன்ற இணைப்புகளுடன் இந்தப் பாட்டை மட்டும் இருபது லட்சம் மக்கள்கேட்டு மகிழ்ந்தனராம். ஆஹா! இருபது லட்சத்து ஒன்றாக நீங்களும் இணையுங்கள்.


புது இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.








November 14, 2011

வாலி வதம் - (கம்பனும் வால்மீகியும்)


(சோ-வின் எங்கே பிராமணனைத் தழுவியது)





ராமாயணத்தையோ மஹாபாரதத்தையோ பொருத்த வரை விவாதங்களுக்கு இடம் வகிக்கும் சம்பவங்கள் நிரம்ப உள்ளன. வாலி வதம் பற்றிய சர்ச்சை இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வாலியை மறைந்திருந்து ராமன் கொன்றிருப்பானேயானால் அது தவறான ஒரு செயலே. அதை நியாயப்படுத்த முடியாது.


மறைந்திருந்து இராமன் கொன்றான் என்பதற்கு ஆதாரம் இல்லை, மாறாக வாலி மறைந்திருந்து கொல்லப்படவில்லை என்று நிறைய ஆதாரம் இருக்கிறது. ராமன் மறைந்து நின்றிருந்ததாக வால்மீக ராமாயணத்தில் இல்லை. வாலியை வதம் செய்ய நாண் ஏற்றும் போது பட்சிகளும் மிருகங்களும் அலறுகின்றன. பேரொலி எழும்புகிறது. அப்படியொரு ஒலியை அவன் கவனியாமல் இருந்திருக்க முடியாது. அம்பு எய்தபின் வாலி புலம்புகிறான் "நான் பார்க்காத போது நீ என்னை வீழ்த்தினாய்" என்கிறானேயொழிய மறைந்து நின்று அடித்ததாக கூறப்படவில்லை. அதற்கு ராமன் "யுத்தத்தில் அம்பு எய்தும் பொழுது எதிரி அதை பார்க்கிறானா இல்லையா என்பது அவசியம் இல்லை. மேலும் நீ ஒரு மிருகம், மிருகத்தை மனிதன் வேட்டையாடும் பொழுது அதற்கு நியதி ஏதும் இல்லை" என்கிறான். நாரதர் சொல்லச் சொல்ல வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதுகிறார். நாரதர் சொல்லும் பொழுது வாலியை தன் பராக்ரமத்தினால் வீழ்தினார் என்றே வருகிறது.


குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ?
வலம் இது; இவ் உலகம் தாங்கும் வண்மை ஈது; என்றால் - திண்மை
அலமரச் செய்யலாமோ, அறிந்திருந்து அயர்ந்துளார் போல்?"


(நன்றி chennailibrary.com)


"உன் குலம், அறிவு, கொற்றம் தான் என்னே! உன்னுடன் வந்து இணைந்த நற்பண்புகள் எத்தகையது!உலகம் மூன்றின் ஆளுமையானவன். உன் ஆற்றல் வண்மை எப்படிப்பட்டது! உன் பண்புகள்மறந்து இத்தகைய தகுதியற்ற செயலை செய்யலாமோ" என வாலி இகழ்வதும்


"நீ பிறன் மனை கவர்ந்த கொடிய பாவத்தை செய்துள்ளாய். சரணம் என அடைந்தவனை கொல்ல முயன்றாய்.இதையெல்லாம் தடுத்து அறத்தை நிலை நாட்டுவது என் கடமை" என்று இராமன் சொல்வதெல்லாம் கவிதைக்குமகுடமான கம்பராமாயணத்தில் உள்ளது.


இது பற்றிய ஆய்வு மேற்கொண்டு 1939 ஆம் வருடம் ஸ்ரீ சீதாராம சாஸ்த்ரிகள் என்பவர் எழுதியிருக்கிறார். கம்ப ராமாயணத்தில் வாலியை மறைந்து வீழ்த்துவது போல் இருந்தாலும், நாரதர் சொல்லி வால்மீகி முனிவரால் எழுதப்பட்டதும், முதன்மையானதும் ஆதாரமானதுமான வால்மீகி ராமாயணத்தில் அவ்வாறு இல்லை.

November 06, 2011

இராமன் எனும் மனிதன்


(எங்கே பிராமணன் தொடரைத் தழுவியது)



அவதாரங்களில் க்ருஷ்ண அவதாரம் பரிபூர்ண அவதாரம். அதாவது இறைநிலையில் நின்றே, அதனை விட்டு விலகாமல், செயலாற்றிய அவதாரம் என்று சொல்வர்.

ராம அவதாரமோ மனிதனாக வாழ்ந்து, மனிதனாகவே உணர்ந்து நடைமுறை இன்ப துன்பங்களை அனுபவித்து பின் படிப்படியாக இறைநிலையின் பூர்ணத்துவத்தை உள்வாங்கிக் கொண்டவர். ராமன் தன்னை பலவேறு நேரங்களில் சாமான்ய மனிதனாக மட்டுமே உணர்ந்தான் எனக் எடுத்துக்கூறக்கூடிய சம்பவங்கள் பல.



ராமனிடம் குகன் கொண்டிருந்த அன்பும் நீதி வழுவாத சிறந்த அரசனிடம் பிரஜை கொண்டிருந்த மரியாதையை ஒத்திருந்தது. "பாருக்கே அரசனான உன்னை இந்தச் சடை முடியில் பார்த்த கண்ணை புடுங்காமல் இருக்கிறேனே" என்று கற்பித்து எழுதப்பட்டிருக்கிறது. "பாருக்கே அரசன்" என அன்பு மிகுதியில் குறிப்பிடும் குகன், அரசனாக ராமனை வரிக்கிறானேயன்றி இறைவன் என நினைத்து அன்பு செலுத்தியதாகப் புலப்படவில்லை.


குகன் நினைப்பும் புரிதலும் ஒரு புறம் இருக்கட்டும். இராமனே தன்னை சாமான்ய மனிதாக உணர்ந்து தான் வாழ்ந்து முடித்திருக்கிறான். முன்பு சொன்னது போல், இறைநிலையிலிருந்து செயலாற்றிய அவதாரம் க்ருஷ்ண அவதாரம் தான். இராமன் தன்னை மனிதனாகத் தான் உணர்ந்தான். சீதையின் அக்னிப்ரவேசத்தின் பொழுது பல தெய்வங்களும் வந்து மன்றாடுகிறார்கள். "நீ யாரெனவே மறந்தாயா" என்று கேட்பதாகவும், அதற்கு ராமன் "நான் தசரதப் புதல்வன், நான் ஒரு மனிதன்" என்று பதிலுரைப்பதாகவும் தான் புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


இராமனும் துக்கம் உணர்ந்திருக்கிறான். பிரிவை உணர்ந்து வருந்தியிருக்கிறான். சாமன்யன்யனைப் போல் பாசத்திலும் கட்டுண்டிருந்திருக்கிறான். சீதையைக் காணாமல் பரிதவித்து துடித்திருக்கிறான். இலக்குவனை மறுபடியும் நாட்டுக்குச் செல்லப்பணித்து, தன்னால் சீதையின்றி உயிர் தாங்க முடியாதுஎன்றே புலம்புவதாக வால்மீகி எழுதியுள்ளார். அலைகடலில் சிக்கிய படகினைப் போல் தவிக்கும் இராமனுக்கு இலக்குவன் ஆறுதல் அளிப்பதாகவே எழுதப்பட்டிருக்கிறது. பாசமும், பந்தமும், மாயையும் அத்தனை ஷக்தி வாய்ந்தவை. "மாயாதீத ஸ்வரூபிணி"யாக இருக்கும் அவள் விரிக்கும் வலையில் இராமனே சிக்கியிருந்தான் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்.

'கல்கி' வார இதழின் பரிசுப் போட்டி



'கல்கி' வார இதழ் நடத்திய "கௌதம்-வாசுதேவ்-மேனன் கை குலுக்கும் மெகா பரிசுப் போட்டியில்" 'கதாசிரியர் பொட்டியில்' என்னை வெற்றி பெற்றவராக அறிவித்துள்ளனர்,என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டி பற்றிய முடிவுகள் 13.11.2011 கல்கி இதழில் வெளிவந்துள்ளது.


நன்றி.

November 03, 2011

நளனின் சமையல் கலை

(எங்கே பிராமணன் தொடரைத் தழுவியது )






உணவை பக்குவமாகத் தயாரித்து பரிசாரகம் செய்வது விருந்தோம்பலின் முக்கிய குணம். உபசாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் உண்டு. விருந்தினர்களை தெய்வ அம்சமாகக் கருதி உணவளித்தல் அவசியம். சமையல் வல்லுனர்களை அக்காலத்தில் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர்களும் மதாச்சார்யார்கள் பணப் பெற்ற ஏனைய பலரும் ஆதரித்துள்ளார்கள்.


நளனின் அமுதபாகத்திற்கு பின்னால் ஒரு கதை உண்டு. விதர்ப நாட்டு இளவரசி தமயந்தியின் அழகில் மானிடர் மட்டுமின்றி மற்ற லோகத்தவரும் மோகம் கொண்டனர். இந்திரன், அக்னி, வருணன், யமன் ஆகிய தேவர்களும் அதில் அடக்கம். சுயம்வரத்தின் போது தம்மில் ஒருவரை தேர்ந்தெடுக்க நளனையே அவர்கள் தூது அனுப்ப, தமயந்தியோ நளனைத் தவிர வேறு யாரையும் மணக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கிறாள். நளனைப் போலவே வேடம் தரித்து நால்வரும் சுயம்வரத்தில்பங்கேற்க, தன் அன்புக்குறிய நளனை கண்டுணர்ந்து மாலையிடுகிறாள் தமயந்தி. தேவர்கள் நால்வரும் விட்டுக்கொடுத்து ஆளுக்கு இரு வரம் தருகின்றனர். அதில் ஒன்று யமதர்மன் கொடுத்த வரம். உணவு சமைப்பதில் வல்லுனர் மட்டுமன்றி, ஈடு இணையற்ற சுவைபெற்று திகழும்படி அருளிச் சென்றான்.


அந்த உணவே நளனுக்கு தன் வாழ்வை மீட்டுத்தந்தது என்றால் அது மிகையாகாது. கலிபுருஷனும் தமயந்தியின் பால் ஆசைப்படுகிறான். நளனுடன் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதைக் கேள்வியுற்றதும், அவன் நாடும் நகரமும் சூதாட்டத்தில் அழிந்து போக சாபமிடுகிறான். பனிரெண்டு வருடம் அவன் மாளிகையில் சேவகனாகப் பணியேற்று தக்க சமயம் பார்த்து அவனுள் புகுந்து அழிவை ஏற்படுத்த செயல்படுகிறான் கலிபுருஷன். அதன் பின் அவன் சூதாட்டில் தோற்பதும், தன் மனைவியை பிரியவும் நேருகிறது. வெகு சிரமங்களுக்கும் துன்பத்திற்கும் பிறகு நளனுக்கு தமயந்தி மீண்டும் கிடைக்கிறாள். நளனின் சமையல் பக்குவத்தை உண்ட உடனேயே உருமாறியிருப்பினும் நளனை தமயந்திக்கு அடையாளம் தெரிகிறது.


சமையல் கலை இரு அன்புள்ளங்களை ஒன்று சேர்த்துள்ளது என்பதற்கு இவர்களின் கதையே சிறந்த சாட்சி. The way to man's heart is through his stomach" இவர்கள் கதையைக் கேடு பின்னால் எழுதப்பட்டதோ?



பி.கு: சிங்காரவேலு முதலியார் என்பவர "அபிதான சிந்தாமணி" எனும் புத்தகத்தில் சமையல் உட்பட அறுபத்தி நான்கு கலைகளைப் பற்றி மட்டுமின்றி விஞ்ஞானம், புராணம், மதம், என அனைத்து துறைகளுக்கும் விளங்கங்கள் எழுதியிருக்கிறார். ஏறக்குறைய எந்க்ய்க்லொபெஅடிஅ விற்காக செய்யக்கூடிய வேலையை தனியொரு மனிதனாக பத்து வருடப் உழைப்பின் பலனாக புத்தகத்தைஎழுதி, மிகுந்த சிரமங்களுக்கு உட்பட்டு பிரசுரித்தார் என்று சோ கூறுகிறார்.


இதைப் பற்றிய விக்கிப்பீடியா குறிப்பு இதோ:
http://en.wikipedia.org/wiki/Abithana_Chintamani

October 27, 2011

ஹரிஸ்சந்திரன் கதை



('எங்கே பிராமணன்' தொடரை தழுவியது)







வழிவழியாய் வந்த சரித்திர அல்ல்து புராணக் கதைகளில் கற்பனைக்கு இடம்கொடுத்து மாறி வந்த சம்பவங்கள் பல. ஆதாரம் அற்றோ அல்லது தகுந்த ஆதாரமின்றி பின்னப்பட்ட கதைகள் மூலக்கதையுடன் ஒன்றுவிடுவதால், நாளாவட்டத்தில் உண்மை சம்பவம் என்றே நம்பப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட ஒன்று தான் ஹரிஸ்சந்திரன் மனைவியின் தாலி அவன் கண்களுக்கு மட்டுமேயன்றி பிறர்க்கு தென்படாதென்பது.

சுவைபட சித்தரித்திருக்கும் திரைக்காவியங்களிலும் உபன்யாசங்களிலும் அப்படி கூறப்பட்டு வந்தாலும், தொன்று தொட்டு வழங்கி வரும் புராணக் கதையில் இவ்வாறு கூடப்படவில்லை.

ஹரிஸ்சந்திரனின் கதையில் நமக்கு தெரியாத சம்பவங்களும் உண்டு. குழந்தையில்லா குறையை போக்க, பிள்ளை வரம் வேண்டி வருணனை துதிக்கச் சொல்கிறார் வசிஷ்டர். ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் வருணனின் வரம் அளிக்கிறார், பிள்ளை பிறந்ததும் தனக்கே அப்பிள்ளையை பலி கொடுக்க வேண்டும் என்பது நிபந்தனை. பிள்ளை பிறந்ததும் பலி கேட்கும் வருணனை, பல் முளைத்ததும் பலியிட்டுவிடுகிறேன் என்கிறான் ஹரிஸ்சந்திரன். பல் முளைத்ததும் மீண்டும் வந்து பலி கேட்கிறார் வருணன். பால்பற்கள் விழுந்து வேறு பற்கள் முளைத்ததும் தருவதாகச் சொல்கிறான், அதன் பின் வந்து கேட்கும் போது மீண்டும் தட்டிக் கழிக்கிறான். உபநயனம் நடந்த பாலகனை பலியிட்டால் மேலும் விசேஷம் எனவே பொறுக்குமாறு வேண்டுகிறான். பிள்ளைக்கு விவரம் அறியும் பருவமாதலால், தனக்கு ஏறபட்ட நிலைமையை புரிந்து ஓடி ஒளிந்து விடுகிறான். ஏழை ஒருவனின் பிள்ளையை விலைக்கு சுவீகாரம் எடுத்து பலி கொடுக்க எத்தனிக்கிறான். தன் நிலைமையை உணர்ந்த பாலகன் பயம் கொள்கிறான். இதையறிந்த விஸ்வாமிதரர் அப்பாலகனுக்கு வருண மந்திரம் உபதேசிக்கிறார். தலையை பீடத்தில் வைத்த மாத்திரத்தில் மந்திரம் உச்சரிக்கிறான். வருணனும் மகிழ்ந்து நிபந்தனையை விலக்கு அந்த பாலகனை அருளிச் செல்கிறார். ஹரிஸ்சந்திரனுக்கும், அவன் உண்மைப் புதல்வனைக்கும் அருள் பாலிக்கிறார்.

இதுவும் புராணக் கதை ஆனால் அதிகம் கேள்விப்படாத கதை. விஸ்வாமித்ரர் வசிஷ்டரிடம் "ஹரிஸ்சந்திரன் பொய் பேசுவான்" என்று சபதம் செய்து அவனை பரிட்சிக்கிறார். மேற்கொண்டு நடந்த கதை அனைவரும் அறிந்ததே. அக்கதையின் படி, ஹரிஸ்சந்திரனும் சந்திரமதியும் ஒருவரை ஒருவர் தாம் யார் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஆனால் தம் மகனை கண்டு கொள்கிறான் ஹரிஸ்சந்திரன். மற்றபடி புராணக் கதையில் தாலியைப் பற்றி குறிப்பு ஒன்றும் இல்லை.

இக்கதையின் படி ஹரிஸ்சந்திரன் தாலி விஷயம் என்னவாயிற்றோ என்னவோ, ஆனால் வருணனை "இன்று போய் நாளை வா" என்று பிள்ளைப் பாசத்தால் அனுப்பி வைக்கிறான். சொன்ன சொல்லை காப்பாற்றுபவன் என்ற கூற்று சற்றே மழுங்குகிறது.

லக்ஷ்மணன் கோடு, சந்திரமதி தாலி, வாலி சண்டையில் எதிராளிக்கு பாதி பலம் தத்தம் ஆகிவிடும், இன்னும் என்னென்ன கட்டுக்கதைகள் புராணத்துடன் பின்னியிருக்கின்றனவோ!

August 13, 2011

மூழ்காத ஷிப்பே ஃப்ரென்ஷிப்பா



உன் உணர்வுகளைப் புரிந்தவள் நான்
உள் உறங்கும் கனவுகளின்
வண்ணம்அறிந்தவள்.
என் எண்ணத்தை ஓசையாக்கியவன் நீ
துவண்ட சிறகுகளுக்கு உயிரூட்டியவன்.

நம் உறவுக்கு
கயிறு பிணைத்து பெயர்சூட்டலாமென்றேன்
கைவிலங்கால் வேலியிட்டு
காட்டாற்றாய் ஓடும் அன்பை
கட்டுப்படுத்த வேண்டாமென்று
இதயபூர்வமாய் நான் ராக்கி கட்ட வந்த தினத்தில்
நீயோ நடுநடுங்கிப் போய்
தலைதெறிக்க ஓடி ஒளிந்தாய்.

இனிய நண்பனே
நட்பின் மேல் கொண்ட நம்பிக்கை
உறவின் மேல் உனக்கு அற்றுவிட்டதோ?

இன்னமும் நான் உன் தோழியாகவே...


June 20, 2011

நிலையற்ற உலக இன்பம் (சோ-வின் எங்கே பிராமணனைத் தழுவியது)

அநித்யமானது உலகம். அப்படியெனில் அங்குள்ள பொருளும் நித்தியமில்லாதவை. அங்கு பெறப்படும் இன்பமும் துன்பமும் மாறக்கூடியவை. மாறாமல் இருப்பது சத்தியம் ஒன்றே. எனினும் நித்தியமில்லாத சுகத்தையும் இன்பத்தையும் போகத்தையும் புகழையும் மனம் நாடுகிறது. அப்படி நாடினாலும் கூட ஏதேனும் ஒரு கட்டத்தில் திருப்தி ஏற்படுமா என்பதும் சந்தேகமே. மேலும் மேலும் நாடிச் செல்வதால் திருப்தி ஏற்படுவதே இல்லை. ஆசைகளின் பசி அடங்குவதே இல்லை . இலக்கை எட்டி விட்ட நிலையில் இன்னொன்று முடிவின்றி முளைத்துக் கொண்டே இருக்கும்.

சுவர்கமும் நரகமும் அவரவர் மனநிலையில் இருக்கிறது. நம் மனமே நமக்கு நண்பன், மனமே நமக்குப் பகைவனும் கூட என்பது அனைவருக்கும் புரியும். எனினும் ஆசைகள் முடிவற்று நீண்டு கொண்டே இருக்க, 'இன்னும் இன்னும்' என்று மனமும் சபலப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஞானம் ஒன்றே சத்தியம். சொத்தும் சுகமும் நிரம்பப் பெற்றிருந்தாலும், மன நிம்மதியை நிச்சலமில்லா அமைதியை அளிப்பது ஞானம். லோபமுத்திரை என்பவள் ராஜகுமாரி. பொன்னும் பொருளும் படைபலமும் நிரம்ப பெற்றிருந்தும், இகத்தே பணமும் பதவியும் அற்ற அகஸ்திய மாமுனிவரை திருமணம் செய்தார். காசும் பணமும் படையும் மட்டுமே சொத்து என்றால் அது அழிந்து விடக் கூடியது. அழியா கல்வியும் ஞானமும் அவர் சொத்தாக இருந்தது. தமிழ் இலக்கணம் இயம்பியவர். அசாத்யக் கல்வியறிவு நிரம்பப் பெற்றவர். அவரையே பெரும் சொத்தாக மதித்தாள் அரசகுமரி. அவர் மூலமாய் ஆயிரம் பேருக்கு சமமான கீர்த்தி பெற்ற ஒருவனை புதல்வனாகப் பெற்றாள். அழியாப் புகழ் பெற்றாள். இகத்தின் சுகத்தை காட்டிலும் பரத்தின் சுகம் நீண்ட ஆயுள் உள்ளது. அதனைக் காட்டலும் உயர்ந்தது தெளிந்த ஞானம். போதுமென்ற மனம் அதற்கு வித்து.

போதுமென்ற மனம் எவனுக்கு வரும்? இன்பம் என்னவென்று ருசித்தவனுக்கே அமையும். அறியாது பசியுடன் இருப்பவனுக்கு போதுமென்ற மனம் வருவதில்லை. யயாதியின் இளமை வெகு முன்னதாகவே சாபத்தின் பேரில் பறிக்கப்பட்டு விட்டது. ஆசைகள் அடங்காமல், அனுபவிக்கும் எண்ணம், மனம், வயது எல்லாம் இருக்க, உடல் முதுமை அடைவது எவ்வளவு கொடுமையானது! அவனால் தன் ஆசைகளை கட்டுப் படுத்த முடியவில்லை. தன் மகனின் இளமையை பணயமாகக் கேட்டான். தந்தை மேல் அத்தனை பற்று கொண்ட மகனும் தன் இளமையை தானமாகக் கொடுத்து முதுமையை பெற்றுக் கொண்டான். எப்பேர்பட்ட மகன்! பல காலம் இன்புற்று எல்லா சுகங்களும் அனுபவித்தான் யயாதி. இறுதியில் ஆசைகளை அனுபவித்து தணிப்பது இயலாத காரியம், விட்டொழிப்பதே சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்தான். தன் ராஜ்ஜியத்தையும் இளமையையும் மகனுக்கே கொடுத்து விட்டு, முதுமை ஏற்று, காற்றிலும் பனியிலும் கடும் வெப்பதிலும் தளராது கடும் தவமியற்றி, ஞான நிலையில் நற்கதி அடைகிறான்.

ஆசைகளும் அஹங்காரமும் மனிதப் பிறவியைத் தாண்டியும் நம் உடன் வருவது. சுவர்க லோகத்தில் அவரை பெரும் மதிப்பும் மரியாதையுடனும் வாழ்த்தி வரவேற்கின்றனர். இந்திரன் முதல் அனைவரும் அவரை தங்கள் வழிகாட்டியாய் மதித்து, ஞான உபதேசிக்க வேண்டுகின்றனர். யயாதியின் ஞானமும் அறிவும் அனைவரின் மரியாதையையும் பெற்றுத் தருகிறது. "உமக்கு சமமான ஞானம் உள்ளவர்கள் எவரேனும் உண்டா?" என்று கேள்வி எழுப்ப, யயாதி "தேவர்களிலோ ரிஷிகளிலோ கந்தர்வர்களிலோ கூட எனக்கு சமமான ஒருவனை நான் கண்டதில்லை" என்று சற்றே அஹங்காரம் மேலிட பதிலளிக்கிறார். அஹங்காரம் குடி கொண்டு விட்டபடியால், மறுபடி பூலோகம் செல்ல நேரிடுகிறது. தன் தவறை உடன் உணர்ந்த யயாதி, தன்னை மேன்மையானவர்ள் அல்லது சாதுக்களின் நடுவிலும் விழச் செய்யும் மாறு வேண்டுகிறார். அங்கே ரிஷிகள் பலரின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார்.

சுவர்கம் செல்ல ஏழு வழிகள் இருப்பதாக சொல்கிறார்.

தவம்
தானம்
நிதானம்
அடக்கம்
இந்திரியங்களை அடக்கி ஆளுதல்
எளிமை


போன்ற குணங்களை ஒருவன் பெற்றித்தல் அவசியமாம். சுவர்கமும் புகழும் கீர்த்தியும் கூட நித்தியம் இல்லதவை. நித்தியமானது இறைவனடி ஒன்றேயாம்.

April 04, 2011

மாரீசனின் திருந்திய வாழ்வு (சோ-வின் எங்கே பிராமணன் தொடரைத் தழுவியது)

மாரீசன் என்ற அரக்கன் மிகப் பொல்லாதவன். மாரீசன் என்று கேட்டவுடன் "மாரீச மான்" நினைவில் வரும். பல முனிவர்களுக்கும் தபஸ்விகளுக்கும் இன்னல் விளைவித்தவன். யாகங்களை கெடுப்பதும், சாத்விகளை இம்சிப்பதும் அவனுக்கு இன்பம் அளிப்பன. தாடகை என்ற அரக்கிக்கு சுபாஹுவும் மாரீசனும் புதல்வர்கள். தாடகையும் அவள் புதல்வர்களுடன் கானகம் முழுவதும் சுற்றித் திரிந்து அட்டகாசம் செய்து வந்தனர். ஹோம குணங்களில் இரத்த மழை பொழியச் செய்தும், மாமிசங்களை விட்டெரிந்தும், இன்னும் பல்வேறு விதமாயும் இன்னல் விளைவித்தனர். இவர்களை அழிக்கவும் யாகத்தை காக்கவும் விஸ்வாமித்ரர் தசரதனிடம் விண்ணப்பித்து இராமனின் உதவியை நாடுகிறார்.


தாடகை ஒரு யக்ஷ கன்னிகை. பிரம்மதேவனின் வரத்தால் ஆயிரம் யானைகளின் பலம் கொண்டவள். சுந்தன் என்பவனை திருமணம் செய்து கொண்டு மாரீசன் , சுபாஹு என்ற புதல்வர்களை ஈன்றெடுத்தாள். ஒரு சமயம் சுந்தன் அகஸ்திய முனிவரின் ஆசிரமத்தை அழிக்க முற்படுகிறான். வெகுண்ட முனிவர் அவனை பஸ்பமாக எரித்து விடுகிறார். இச்செய்தி அறிந்த தாடகை, அகஸ்திய முனிவரின் ஆசிரமத்தை சின்னபின்னமாக்க முயல்கிறாள். அகஸ்தியர் அவளையும் அவள் புதல்வர்களையும் அரக்கர்களாகிப் போக சபிக்கிறார். என்கிறது வால்மீகி ராமாயணம்.




விஸ்வாமித்ரர் ஆணையின் படி தாடகையை வதம் புரிந்த ராமன், சுபாஹுவையும் கொன்று விட, மாரீசன் நூறு யோஜனை தூரத்திற்கு அப்பால் தூக்கி எரியப்பட்டு காயப்படுத்தப் படுகிறான். விழுந்து எழுந்தவன், இனி தூய வாழ்வு வாழ வேண்டும் எனப் பிரதிக்ஞை மேற்கொண்டு ஜடை தரித்து தவக்கோலம் பூண்கிறான். எளிமையான வாழ்வு வாழ்ந்து வந்த அவனை பழைய நட்பும் உறவும் விட்டு வைக்கவில்லை.


சூர்ப்பனகை அழுது புலம்பி இராவணனிடம் முறையிட்ட போது கரதூஷ் என்ற அரக்கனை இராமனை அழிக்க அனுப்பி வைக்கிறான் இராவணன். இராமனின் பராக்ரமத்தின் முன் கரதூஷனின் வலிமை பலிக்கவில்லை. கரதூஷனை இராமன் வதம் செய்த விஷயத்தை அகம்பனன் என்ற அரக்கன் இராவணனிடம் தெரிவிக்கிறான். "இராமனை அழிப்பது அத்தனை எளிதான காரியமாகத் தோன்றவில்லை, தந்திரத்தால் மட்டுமே வீழ்த்த இயலும். அவன் மனைவியை நீ அபகரித்து வந்தால் அவளை பிரிந்த ராமன், உயிர் வாழ மாட்டான்" என்ற துர்யோசனை சொல்கிறான் அகம்பனன்.


பழைய தொடர்பினை நினைவில் கொண்டு மாரீசனின் உதவியை நாடுகிறான் ராவணன். "பொன்மானாக வேடம் தரித்து அவள் உள்ளத்தை கொள்ளை கொண்டு விடு. உன்னை வெல்ல ராமன் உன்னைப் பின் தொடர்வான். அத்தருணத்தில் அவன் மனைவியை நான் அபகரித்து விடுகிறென், இதுவே அவனை வெல்லும் யுக்தி" . மாரீசன் சொல்லும் அறிவுரையும் நல்ல உபதேசமும் ராவணனின் சிந்தைக்கு உரைக்கவில்லை. முன்னே தான் வாழ்ந்த கெடு வாழ்வின் தாக்கம் இன்னும் தொடர்கிறதே என்ற வருத்தம் மேலிட புலம்பினாலும், இராமன் கையால் உயிர் விடுவதைக் காட்டிலும் சிறந்தது ஒன்றுமில்லை என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு இறந்து விடுவோம் என்று தெரிந்தே உதவுகிறான் மாரீசன்.


மாரீசன் என்றாலே அவன் வாழ்ந்த துர்வாழ்வும், செய்த அநீதியுமே முதலில் நினைக்கத் தோன்றும். பலருக்கும் அவன் மேற்கொண்ட தவ வாழ்வும், திருந்திய தூய உள்ளமும் தெரியாமலே போய்விட்டது.


சமூகத்தில் கொடிய முத்திரை வீழ்ந்து விட்டால் அதனை முற்றிலுமாய் அழிப்பதென்பது பெரிதும் இயலாமல் போகிறது. இன்றைக்கும் என்றைக்கும் திருந்தி வாழ நினைக்கும் குற்றவாளியை உலகம் ஒப்புக்கொண்டதில்லை. திருந்தாமல் தவறுகளைத் தொடர்வதை விட திருந்தி வாழ்தல் நலம். திருந்தியவனை உலகம் வரவேற்கும் என்ற எதிர்பார்ப்பு அற்று விட்டாலும், உலகம் தங்களை ஒதுக்குவதே அவர்கள் செய்த தீவினைக்கு தண்டனையாய் ஏற்று வாழ்வதே ஒரே வழி. பெருந்தவறுகள் செய்யாமல் உத்தமமாய் வாழ்வது சிறப்பு. உலகம் நம்மை போற்றாவிட்டாலும் தூற்றாமல் வாழ்ந்து முடிப்பதே மேன்மையான வாழ்வு.

March 28, 2011

யார் நண்பன்? -ராஜ நீதிக் கதை (சோ-வின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து

பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு உரைத்த கதை: யார் நண்பன்?



ஆல மரப் பொந்து ஒன்றில் எலி வாழ்ந்து வருகிறது. இயற்கையின் விதிப்படி பூனைக்கு அது ஆகாரமென்பதால், ஆலமரப்பொந்தின் அருகே எலியின் வரவை எதிர்நோக்கி பூனையொன்று காத்திருக்கிறது. பூனைக்கு பயந்து எலியும் வளைக்குள்ளேயே வாழ்ந்து வருகிறது.


ஒரு சமயம் அவ்வழியே சென்ற வேடன் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் வலை விரிக்க, பூனை அதில் அகப்பட்டுக்கொண்டது. இனி பகைவனின் பயம் ஒழிந்தே விட்டது என்று குதூகலித்த எலியும் மெதுவாக வளையை விட்டு வெளியெ வருகிறது. வெளியே வந்த நொடி, வேறு வகையில் ஆபத்தான சூழ்நிலை.


கோட்டான் எலியின் மேல் எந்தக் கணமும் பாய்ந்து குதற தயாராய் காத்திருக்க, வேறு புறமாக ஓடி ஒளியலாம் என்றால் அங்கே கீரிப்பிள்ளையின் கொடூரம். என்னதான் செய்யும் எலி? எதிரி என்றாலும் தற்போது துணிந்து அணுகக்கூடிய நிலையில் இருப்பது பூனை மட்டுமே. அதன் தலைக்கே ஆபத்து எனும் நிலையில் தவிப்பதால் பூனையே தாற்காலிகமாக நமக்கு உதவக்கூடியவன் என்று முடிவு செய்கிறது எலி. அதனிடம் தன் நிலையைக் கூறி, அதனிடத்தில் அண்டி இடம் கொடுத்தால், கோட்டானோ, கீரியோ தன்னை ஒன்றும் செய்யாது, என்று முடிவு செய்து பூனையை அணுகி நண்பனாக்கிக் கொள்கிறது. பதிலுக்கு தானும் வலையை கடித்துப் பூனையை காப்பாற்றுவதாக சத்தியம் செய்கிறது.

சிறிது நேரம் காத்திருந்த கீரியும் கோட்டானும் எலியை ஒன்றும் செய்ய முடியாமல் அதன் வழியே சென்று விட, பூனையின் உதவியால் எலி தப்பியது. இனி வலையை அறுத்து காப்பாற்று என்று பூனை கேட்க, எலியொ மறுத்து பேசுகிறது. "நீ உன் சத்தியத்தை அல்லவா மீறுகிறாய்" என்கிறது பூனை. "உன்னை காப்பாற்ற மாட்டேன் என்று சொல்லவில்லை. வேடன் வரும் சமயமாய் வலையை அறுத்து விட்டால், உயிர் காத்துக்கொள்வதே உன் தலையாய கவனமாய் இருக்க, என்னை விட்டு விடுவாய். இப்பொழுது வலையை அறுத்தால், அடுத்து உன் பசிக்கு நானல்லவோ உணவு" என்று புத்திசாலி எலியின் பதில்.


வேடன் வரும் சமயமாய் வலையை அறுத்து பூனையை தப்பிக்க விடுகிறது. மறுபடி தன் பொந்துக்குள் சென்று ஒளிந்து கொண்ட எலியுடன் நைச்சியமாய் பேச்சு கொடுக்கிறது பூனை. "என் உயிரைக் காத்த நீ இனி என் நண்பன், இருவரும் இனி நல்ல நண்பர்களாய் வாழலாம்"


"அது எப்படி முடியும்? நீ என் விரோதி என்பது இயற்கையின் நியது. உன் ஆகாரமே நான். ஒரு காரண காரியத்திற்காக தோன்றிய நட்பு அத்துடன் முடிந்தது. உறவும் நட்பும் கூட காரிய காரணத்திற்காகத் தான். தேவைகள் முடிந்து விட்டால் அங்கு நட்பும் உறவும் யாரும் பாராட்டுவதில்லை. இது உலக இயல்பு, நியதி" என்கிறது எலி.


எலியின் புத்தி சாதூர்யம் நட்பு பாராட்டும் போது பல நேரம் அவசியமாகிறது. இல்லையெனில், நைச்சியமாகப் பேசும் பசுத்தோல் போர்த்திய புலிகளிடம் சிக்கித் தவிக்க நேரிடும்.


நம் அன்றாட வாழ்விலும் இது போன்ற நட்பு வட்டங்கள் இருக்கின்றன. எனக்கென்னவோ இது தேர்தல் நேரமாகையால் இக்கால அரசியல் கூட்டணிகள் கூட நினைவிற்கு வருகிறது. உங்களுக்கு?

March 01, 2011

துரோகம் - நீதிக் கதை (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)


துரோகத்திற்கு எடுத்துக்காட்டாக ஹிதோபதேசத்தில் ஒரு கதை. பயந்து பரிதாப வாழ்வு வாழ்ந்து வந்தது. முனிவர் ஒருவரை அண்டி, தன்னை பூனையிடமிருந்து பாதுகாக்கும் படி வேண்டிக்கொண்டது. முனிவரும் பரிதாபப் பட்டு, அதனை பூனையாக மாற்றிவிடுகிறார். விட்டதா தொல்லை? உலகத்தில் தொடர்ந்து ஒன்றில்லாவிட்டால் இன்னொன்றாக இன்னல்களும், சவால்களும், சந்தோஷங்களும் அணிவகுத்துக் காத்திருக்கின்றன. இப்பொழுது பூனைக்குப் புதிய பயம், நாயைப் பற்றியது. "என்னை நாய் துரத்துகிறது, முனிவரே அபயம்". பரிதாபப்பட்டு முனிவரும், அதனை நாயாக மாற்றுகிறார். சிறுத்தையொன்று தன் வேட்டைக்கு நாயை குறிவைக்கவே, 'பயந்து ஓளிதல்' முடிவற்றதாகிறது. முனிவரும் இம்முறையும் கருணை கொண்டு அதனை சிறுத்தையாக்குகிறார். சிறுத்தையின் பலம் வந்ததும், அதன் புத்தி முனிவனுக்கு முரணாக வேலை செய்யத் துவங்குகிறது. 'தன்னைப் போலவே இன்னொரு பலசாலி சிறுத்தையை இவர் உருவாக்கினால் என்ன செய்வது!' என்றெண்ணி, முனிவரை கொன்று விட தீர்மானித்து அவரைத் தாக்குகிறது. விழித்துக் கொண்ட முனிவர் அதனை மறுபடி எலியாக்கி விடுகிறார்.

மேலே கூறப்பட்டுள்ள கதையில் எலியின் பாத்திரத்தில் நாம் சந்திக்கும் பல மனிதர்களை நிரப்பலாம்.
'செய் நன்றி மறப்பது' மனிதனுக்கு மிகவும் எளிது. துரோகத்திற்கு எடுத்துக்கட்டாக கூறப்பட்ட கதைகளில் மிருகங்களே பாத்திரமானாலும், பல நேரங்களில் மனிதனின் குதர்க்க புத்தியின் விளைவாகவும் சுயநலத்தின் வெளிப்பாடாகவும் நிகழும் நிகழ்வுகள் துரோகத்திற்கு நல்ல உதாரணம். இப்படிப்பட்ட மனிதர்களும் அவர்களால் விளைந்த சம்பவங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் படிப்பினை. ஒரு சமயம் கிணற்றிலிருந்து அபயக்குரல் கேட்டு அவ்வழியே சென்ற குடிமகன், மிகுந்த யோசனைக்குப் பின், அதில் மாட்டியிருந்த மிருகங்களை காப்பாற்றுகிறான். எம்மை காப்பாற்றினால் நாங்கள் உன்னை கொன்று விட மாட்டொம் என்று சத்தியம் செய்கின்றன. பின்னர் கிணற்றில் தவித்திருந்த மற்றொரு மனிதனையும் காப்பாற்றுகிறான். பேராசையால் இறுதியில் சக மனிதன் தான் இவனை அரசனிடம் காட்டிக் கொடுக்க, மிருகங்களோ செய் நன்றி மறவாமல் உதவுவதாகக் கதை.
சிறு வயதில் அனைவரும் "கல்/கத்திரிக்கோல்/காகிதம்" விளையாட்டு விளையாடியிருப்போம். சைகையால்ஒரே சமையத்தில் கல் அல்லது கத்திரி அல்லது காகிதத்தை தேர்வு செய்யலாம். நம் எதிராளி என்ன தேர்வு செய்கிறார் என்பதைப் பொருத்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். கத்திரி காகித்தை கத்தரித்து விடும். கல் கத்திரியை மழுங்கச் செய்து விடும். ஆனால் காகிதத்தால் கல்லை சுற்றி விடலாம். எது வல்லமை பொருந்தியது? அந்தந்த நேரத்தில் எந்த இரண்டு மோதிக்கொள்கிறதோ அதனையொட்டி வெற்றி தோல்வி. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. vicious circle என்பது தான் உண்மை. மனிதனுக்கு தன்னை விட வலிமை பொருந்திய இன்னொரு ஜந்துவினால் நிகழும் இழப்பை விட சக மனிதனால் படும் துயரும் இழப்புமே அதிகம்.

February 27, 2011

நீதிக் கதைகள் (எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)

அவரவர் வாழ்வில் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களும் சூழ்நிலைகளும் ஏராளும். எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் திடமாகவும் புத்திசாலித்தனமாகவும் அணுகுவதையொட்டியே தனி மனிதனின் வெற்றி தோல்வி அமைகிறது. நீதிக் கதைகளை போதிப்பதன் மூலமாக மனிதனுக்கு உணர்த்தப்பட்ட படிப்பினை அனேகம். இன்றும் "moral stories" உணர்த்தும் ஏராளமான கதைகளை, புத்தகங்களை சிறுவர் சிறுமியர்கள் படித்து பயன் பெறுகிறார்கள். புத்தகங்கள் இல்லாத காலங்களிலும் வழிவழியாக இக்கதைகள் பறிமாறப்பட்டு வந்திருக்கின்றன.

பஞ்சதந்திர கதைகள் விஷ்ணு ஷர்மா என்பவரால், அமரஷக்தி என்ற அரசனின் புதல்வர்களுக்கு புகட்டப்பட்ட நீதிக் கதைகள். இதில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் மிருகங்களும் பக்ஷிகளுமே என்றாலும் ஊடே போதிக்கப்பட்ட நீதி மனிதனின் தனி வாழ்வுக்கு உகந்தது. விக்ரமாதித்தனின் வேதாளக் கதைகளைப் போலவே கதைக்குள் கிளைக்கதைகள் பலவற்றை புகுத்தி, கையாளப் பட்டிருக்கிறது. அதே போல் ஹிதோபதேசத்தில் சொல்லப்பட்டுள்ள கதைகளும் நீதி போதிப்பவையாக இருந்தாலும், இது பெரும்பாலும் ராஜ நீதியை வலியுறுத்தும் கதைகளாக அமைகிறது. இவை நாராயணர் என்பவர் தவள(dhavala)சந்திரன் என்ற அரசனுக்கு கூறப்பட்ட கதைகள். ஹிதம் என்றால் இதமானது (ஹிதமானது) என்று பொருள் கொள்ளலாம். இக்கதைகள் இருநூறுக்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கி வருகிறது. மேலும் மஹாபாரதத்தில், பீஷ்மர் தருமருக்கு கதைகள் மூலமாகவே ராஜநீதி போதித்துள்ளார்.

இப்படிப்பட்ட கதைகள் கேட்கத் திகட்டாதவை. ராஜநீதி என்றில்லாமல், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்களையொட்டி அமைகின்ற படியால் இதன் படிப்பினை பண்டிதனுக்கும் பாமரனுக்கும் பொருந்தக்கூடியவை.

விசுவாசிக்கு உதாரணமாகக் கொண்ட ஹிதோபதேசக் கதையில், சூத்ரகன் என்ற அரசனின் கீழ் வீரவான் என்ற வேலையாள் மிகுந்த விசுவாசியாக உழைத்து வருகிறான். தர்ம சிந்தனையுடையவனாகவும் திகழும் அவன் தனக்கென கால் பங்கு தனத்தை வைத்துக் கொண்டு மீதத்தை தானம் செய்து மேன்மையான வாழ்வு வாழ்ந்து வருகிறான். அரசனுக்கு விதி முடிந்து மரணம் நேரப்போகிறதை அறிந்ததும் தன் மகனையே பலி கொடுக்க தயாராகிறான். இதனை விசுவாசத்தின் எடுத்துக்கட்டாக மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ராஜ-விசுவாசிகள் அதிகம் இருப்பது ராஜ்ஜியத்தின் பலத்தை கூட்டுகிறது. இவர்களை சரியாக அடையாளம் கண்டு கொள்வதே அரசனின் சிறப்பும் புத்திகூர்மையும்.

February 23, 2011

நம்பினார் கைவிடப்படார் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதியிலிருந்து தொகுக்கப்பட்டது)

ஐம்பத்தி ஒன்பது வயது பூர்த்தியாகி அறுபது துவங்கும் போது போது சஷ்டி-அப்த-பூர்த்தி செய்யப்படுகிறது. சாந்தி பூஜை செய்து ஹோமம் வளர்பது வழக்கம். அறுபது வயது துவங்கும் பொழுது, கிரஹ நிலைகள் ஏறக்குறைய பிறக்கும் பொழுது இருப்பது போல் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், ஷாந்தி செய்து கொள்வது விசேஷம் என கருதப்படுகிறது. ஹிந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள சம்ஸ்காரங்களில் இது பற்றிய குறிப்பு இல்லாவிட்டாலும், ஷாந்தி, ஹோமம், பூஜை முதலியவை செய்யப்பட வேண்டிய விசேஷ தருணமாக சஷ்டி அப்த பூர்த்தி கருதப்படுகிறது. தற்போது திருக்கடையூர் என்ற ஸ்தலத்தில் சஷ்டியப்த பூர்த்தியை க்ரமப்படி செய்து கொள்ளும் தம்பதியர் பலர் உண்ட ஐம்பத்தி ஒன்பது வயது பூர்த்தியாகும் பொழுது "உக்ர ரத சாந்தி" செய்வதும், அறுபது முடியும் பொழுது "சஷ்டி அப்த பூர்த்தியும் செய்யப்படுவ தாவும் குறிப்பு இருக்கிறது. காலன் உக்ர ரதமேறி வருவதாகவும், அவனை சாந்தி செய்து குளிர்விப்பதாக ஐதீகம்.

இவற்றையெல்லாம் செய்தால் யமன் திருப்தி அடைவானா? இதெல்லாம் பகட்டுக்கென செய்யப்படும் அனாவசியங்கள் என்று அபிப்ராயம் இருந்தால் அதற்கேற்ற பலனே கிட்டும். எந்த ஒரு செயலின் விளைவு அதன் பால் உள்ள ஈடுபாட்டை பொருத்து அமையும். பக்தியும் நம்பிக்கையும் செயலின் ஊடே பின்னியிருந்தால் அந்த செயலின் மகத்துவம் தனித்து மிளிரும்.

யமனை வென்றவர்கள் ஒருவரும் இல்லை, குறைந்த பட்சம் மரண பயத்தை வென்றவர்களைக் கூட விரல் விட்டு எண்ணிவிடலாம். மரணத்தை வெல்ல முடியாவிட்டாலும், தர்ம தேவனான யமனிடம் போராடி வெற்றி பெற்றவர்களுள் மார்கண்டேயனும் ஒருவன். பதினாறே வயது நிரம்பியவனிடம் எத்தனை நம்பிக்கை / பக்தி இருந்தால், இறைவனே கதியென்று லிங்கத்தைக் கட்டிக்கொண்டிருப்பார்! அப்படிப்பட்ட பக்தி எத்தனை தூய்மையானதாக இருந்தால் சிவனும் லிங்கதினின்று தோன்றி யமனையே வதம் செய்திருப்பார்! மார்கண்டேயன் சிவபக்தனாக மட்டுமே இல்லாமல், இறையையின் அருவத்தை, தத்துவத்தை எல்லா உருவிலும் உணர்ந்த ஞானியாக திகழ்கிறான். விஷ்ணு பக்தனாய் விஷ்ணுவைப் போற்றுகிறான். விஷ்ணுவின் யோக மஹிமையைக் காண்கிறான். ப்ரளய காலத்தைக் காண்கிறான். காணுதற்கறிய பலவற்றை தன் யோகத்தாலும் பக்தியாலும் காண்கிறான். சிவனும் பார்வதியும் அவனுக்கு ப்ரளய காலத்தில் தரிசனம் தர,

"சத்துவ குணம் பொருந்தியவன் நீ
உலகை காத்து சுகமுறச் செய்கிறாய்
ரஜோ குணம் பொருந்தியவன் நீ
உலகத்தை படைபதற்காக அதைக் கொண்டவன் ஆகிறாய்
தமோ குணம் பொருந்தியவன் நீ
உலகத்தை அழிப்பதற்காக அதைக் கொள்கிறாய்"
என்று துதிக்கிறான்.

எல்லாபொருளிலும் எல்லா வடிவிலும், தன்னிலும் பிறவிலும் கூட 'ஒன்றை'யே காணும் பக்குவம் பெற்றாவனாகிய மார்கண்டேயன் தமக்கு பிரியமானவன் என்று அருளிச்செல்கிறார்.

நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசப்படும் பிரபலக் கதை ஒன்று இதற்கு சாலப் பொருத்தமாக அமையும்.

கங்கையில் முங்கி எழுந்தால் கர்மம் (பாபம்) தொலையும் என்று நம்பியே அனைத்து மக்களும் புனித நதி நீராடுகின்றனர். ஒரு சமயம் பரமசிவன்-பார்வதி இடையே சம்பாஷணை நடந்தது. "கங்கையில் ஸ்னானம் செய்தால் பாபங்கள் கரைந்து போகுமே, ஏன் பூவுலக மக்களின் பாபங்கள் தீர்ந்ததாகவே தெரியவில்லை" என்று பார்வதி வினவ அதற்கு "நம்பிக்கையுடன் ஒருவனும் இங்கு ஸ்னானம் செய்தான் இல்லை" என்கிறார் இறைவன். அதனை நிரூபிக்க திருவிளையாடல் புரிகின்றார். வயோதிக வேடத்தில் சிவனும் இளைய மனைவியின் வேடத்தில் பார்வதியும் கங்கையில் நீராடுகின்றனர். முதியவரை கங்கை அடித்துச் செல்கிறது. என் புருஷனைக் காப்பாற்றுவார் இல்லையா என்று புலம்புகிறாள் அந்தப் பெண். அவ்வளவு சீக்கிரம் உதவவும் யாரும் முன்வரவில்லை. கடைசியில் சிலர் முன் வந்த போது "பாபமற்ற இவரை கரைசேர்ப்பவனும் பாபமற்றவனாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் சாம்பலாகி விடுவார்கள் " என்று நிபந்தனை விதிக்கிறாள் இளம் பெண். அனைவரும் தயங்கி வந்த வழியே சென்று விட, ஒருவர் கூட தூக்கி விட முன்வரவில்லை. இறுதியில் ஒரு இளைஞன் kகாப்பாற்றுகிறான். "நீ பாபமற்றவனா" என்ற கேள்விக்கு "அதிலென்ன சந்தேகம், கங்கையில் நீராடிய நிமித்தம் என் பாபங்கள் எல்லாம் கரைந்து விடுகின்றன, ஆகவே நான் பாபமற்றவன்" என்கிறான். இறைவனும் இறைவியும் அவனுக்கு அருள் புரிந்து விட்டு, "நம்பிக்கையோடு ஸ்னானம் செய்தால் மட்டுமே பாபங்கள் விலகும்" என்று திருவாய்மொழிவதாகக் கதை.

இந்து மதத்தில் சில நதிகளை புண்ய நதிகளாகக் கருதி தாய் வடிவில் உருவகப்படுத்தி வணங்கி வருகின்றனர். அங்கு நீராடுதல் அனைத்து பாபங்களையும் போக்க வல்லதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. முக்கியமானதாக எழு நதிகளை குறிப்பிடுவதுண்டு. கங்கை, யமுனை, ப்ரஹ்மபுத்ரா, நர்மதா, கோதாவரி, காவிரி, சரஸ்வதி ஆகிய ஏழும் சிறப்புற்றது. கங்கை நீராடுவதன் முக்கியத்துவத்தை நான் நிறைய கேட்டிருக்கிறோம். ஆனால் பலரும் அறியாத பெரும்சிறப்பு காவிரிக்கும் உள்ளது. நரகாசுரனை வதம் செய்த கண்ணனுக்கு வீர-ஹத்தி (வீரனை கொன்ற பாபம்) தோஷம் பீடித்தது. அதற்கு பரிகாரமாக காவிரியில் நீராடி பாபத்தை தொலைத்தாராம். துலா மாதத்தில் விடியல் நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரிஅ, காவிரியில் அனைத்து புனித நதிகளும் சங்கமம் ஆகின்றன எனவே துலா ஸ்னானம் காவிரியில் செய்வது மிக உத்தமம். கங்கையில் மூன்று நாள் குளித்தால் கதி மோக்ஷம், யமுனையில் ஐந்து நாள் நீராட வேண்டும். காவிரியில் துலா ஸ்னானம் செய்தல், உடனே விஷ்ணு லோகத்திற்கு இட்டு செல்ல வல்லது என்று காவீரியின் மகிமையை எடுத்துரைக்கின்றனர் சான்றோர். அதுவும் துலா /ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறைக் காவிரியில் நீராடுவது மிக்க சிறப்பு.

மயிலாடுதுறை என்ற மாயவரத்தில் மயூரநாதர் கோவில் ஸ்தல வரலாறு நாதசர்மா-அனவித்யா தம்பதிகள் இங்கு மோக்ஷம் அடைந்ததை நமக்கு எடுத்துறைக்கிறது. ஒரு சமயம் துலா மாதத்தின் கடைசி நாளிலும் காவிரியில் நீராட முடியாமல் போகவே நாதசர்மா-அனவித்யா தம்பதியர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகின்றனர். அன்று கனவில் தோன்றிய சிவன், மறுநாள் காலை சூரிய உதயம் முன்பு நீராடினாலும் பாபம் நீங்கி மொக்ஷம் கிட்டும் என்று அருள்கிறார். அதன் படியே அதிகாலை நீராடி அத்தம்பதியர் ஈசனுடன் ஐக்கியம் ஆகின்றனர். இத்தம்பதிகளுக்காக வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை "முடவன் முடக்கு" என்றும் வழங்குகின்றனர். இக்கோவிலில் இறைவியின் சன்னிதானத்திற்கு பக்கத்தில் அனவித்யாம்பிகை என்ற பெயரில் ஒரு சன்னிதி காணப்படுகிறது. நாதசர்மா ஐக்கியம் ஆன லிங்கம் அவரின் பெயரிலேயே இருக்கின்றது. இவையெல்லாம் நடந்ததற்கு தகுந்த சான்றாக, காசியில் இருக்கும் ஒரு கல்வெட்டில் கூட இத்தம்பதியைப் பற்றிய குறிப்பு இருக்கிறது.

February 21, 2011

சில பழக்கங்கள் வழக்கங்கள் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதியை ஒட்டி அமைந்தது)


ஏன் என்று தெரியாமலே சில பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளுதல் முந்தைய தலைமுறையோடு போயிற்று. இப்பொழுதெல்லாம் பகுத்து அறிவதனால் சில மூட நம்பிக்கைகளை தூக்கி எறிந்து தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும் செய்கிறோம். அதே நேரத்தில் தேவையான, அறிய, நல்ல விஷயங்களை கோட்டையும் விட்டு விடுகிறோம். அதைப் பற்றி அறிந்து கொள்ளவும் எத்தனிக்காமல், எல்லாவற்றையும் "பத்தாம்பசலித் தனம் அல்லது மூட நம்பிக்கை" என்று ஒதுக்குகிறோம். எந்த விஷயத்தையும் சொல்லப்பட்ட நோக்கம் தெரிந்து கடைபிடித்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

'வீட்டில் மஹாபாரதம் ஓதினால் அல்லது படித்தால் வீட்டிற்கு ஆகாது' என்ற கூறுவதுண்டு. ஆனால் மாஹாபாரத்திலேயே அதனை படித்தல் புண்ய காரியம் என்று வியாசர் குறிப்பிட்டிருக்கிறார். இக்கதையை சிரத்தையுடன் கேட்பவன், படிப்பவனுக்கு ப்ரஹ்மஹத்தி தோஷம் உட்பட பலகோடி தோஷங்களும் இல்லாதொழியும் என்று குறிப்பிடுகிறார். அறம் வளர்க்கும் நல்ல பிராமணனுக்கு பசு தானம் செய்வதை விட, மஹாபாரதம் படித்தல் புண்ய காரியம் என்கிறது பாரதம். இத்தனை விளக்கங்கள் வியாக்கியானங்கள் தாண்டியும் பலரும் பாரதத்தை வீட்டில் படிப்பதில்லை.

ராமாயணம் புனித நூல் என்றால் மஹாபாராதம் ஏன் வீட்டிற்கு ஆகாது? கிருஷ்ணின் கீதோபதேசம் படம் மனையில் இருத்தல் சுபீக்ஷம் என்றால், ஏன் மஹாபாரதம் படித்தல் உகந்ததாக கருதப்படவில்லை? எந்த ஒரு செயலுக்கும் சம்பிரதாயத்திற்கும் மனையிலும், சுற்றுப்புறத்திலும், நல்லிணக்கமும், நல்லெண்ணம், பரிவு, தயை, நன்னடத்தை முதலியன புகட்டுவதே நோக்கமாக இருக்கும். மஹாபாரதக் கதைகள் த்ரேதாயுகத்தின் முடிவில் நடை பெற்றதால், தர்மத்திற்கு புறம்பான கதைகள் நிறையவே நடைபெற்றுள்ளன. சூதாட்டமும், மனையாளை பணயமாக வைத்து சூதாடுவதும், பல கதாபாத்திரங்களின் குணங்களும், நடத்தையும், பொதுவாக மனிதன் தன்னை உயர்த்திக் கொள்ள வழிவகுக்கும்படியாய் அமையவில்லை. வஸ்த்ரபரணமும், ஜெயிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டதால் சில நேரங்களில் யுத்த நீதிகளும் கூட மீறப்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் படிக்கும் சாமான்யன் மனதில் குழப்பமும், நேர்மைக்கு புறம்பான கதைகளும் மனதில் பதியுமே அல்லாது தர்ம நியாயங்கள் முரண்பட்டு நிற்பதால் அவனுக்கு நன்மை அதிகம் விளையும் வாய்ப்பில்லை. இராமாயணத்தில் பக்தி, பொறுமை, தயை, ஒழுக்கம் முதலியன அதிகம் காணப்படுவதால் அதனைப் மிகப் புனித நூலாக போற்றுகிறோம்.

இதனைப் போலவே வைஷ்ணவ தர்மத்தை கடை பிடிப்பவர்கள் சிவன் கோவிலுக்கு செல்வதோ அல்லது சிவனைத் துதிப்பதோ கூடாது என்னும் கருத்தும் சம்பிரதாயங்கள் விதிமுறைப்படியே நடக்கிறது என்கின்றனர். ஒரே ரூபம் அல்லது தத்துவத்தின் பால் முழுமையான தீவிரமான பக்தி செலுத்துவது பக்தியின் மேன்மைக்கு வழி வகுக்கும். இறைவன் ஒருவன் என்ற எண்ணத்தை வலியுறுத்தவே, எந்த வடிவத்தை துதித்து போற்றுகிறோமோ அதனின் பால் பக்தியும் அன்பும் செலுத்தி அதனைத் தவிர வேறொன்றை வேறொரு தத்துவத்தை நினையாத பக்தி முக்திக்கு வழி என்பது நம்பிக்கை. இதனாலேயே ஆகமவிதிப்படி கட்டப்பட்ட சிவன் கோவில்களில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுதல் அதே போல் விஷ்ணு கோவில்களில் மீனாக்ஷி திருக்கல்யாணம் நடைபெறுவதும் இல்லை.

அதே போல் பெருமாள் கோவில்களில் சடாரி சாத்துவதும் சிறப்பு. சடாரியின் மேல் இறைவனின் திருவடிபொறிக்கப்பட்டிருக்கும். இதனால் இறைவன் நம்மை ஆள்கிறான் என்ற பவ்யமும் குடிகொள்ளும். அஹங்காரமும் மட்டுப்படும். நம்மாழ்வார் பெருமாள் திருவடிகளை அடைந்தவர் அவரே குருவாக இறைவனின் பாதத்தை நம்மிடம் சேர்பித்து நம்மை உய்விக்கிறார் என்று நம்பிக்கை. நம்மாழ்வாருக்கும் சடகோபன் என்று பெயர். சடாரிக்கும் சடகோபம் என்று வழங்குகிறார்கள். 'சடை' என்ற தேவையற்ற விஷயங்களை விலக்குவது, தீர்ப்பது என்று பொருள். பெருமாளுக்கு ஆதிசேஷனை பாதரக்ஷையாக பார்ப்பதால் இதை ஆதிசேஷம் என்றும் சொல்வார்கள்.

பொய்கையாழ்வார் பாசுரத்தில்

"சென்றால் குடையாம்
இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம்
நீள்கடலுள்-என்றும் புணையாம்
மணிவிளக்காம் பூம்பட்டாம்
புல்கும்அணையாம் திருமாற்கு அரவு"

நடந்தால் குடையாகி, இருக்கும் பொழுது சிங்காசனமாகவும், நின்றால் பாதரக்ஷையாகவும், சமுத்திரத்தில் படுத்து மணிவிளக்காக பட்டாகவெல்லாம் அரவு(ஆதிசேஷன்) அலங்கரிப்பதாக கூறுகிறார்.

திருமால் கோவிலில் இராமாஜருக்கென்று சன்நிதி உண்டு, அதை உடையவர் சன்னிதி என்கின்றனர். அங்கு வழங்கப்படும் சடாஅரி 'முதலியாண்டான்' சடாரி என்று குறிப்பாகிறது.

சடாரியைப் பற்றி குறிப்பெடுக்கும் பொழுது கீழ்கண்ட சுட்டியில் மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தன.

http://verygoodmorning.blogspot.com/2007_11_01_archive.html

சடாரி அல்லது சடகோபம்; அதைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்க; ஏதோ ஒரு கிரீடம் போல இருக்கும். அதன் மேலே இரு பாதங்கள்! இறைவனின் திருப்பாதங்களை நாம் தேடிப் போகா விட்டாலும் கூட, அவை நம்மைத் தேடி வருகின்றன! நம்மைக் கடைத்தேற்ற! கோவிலுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, இந்த சடாரி கூடவே பயணிக்கும்! அறியாத சீடன், குருவை மட்டும் எப்படித் தனியாக அறிந்து விட முடியும்? அவன் குருவை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை! சீடனை நோக்கிக் குரு தானே வருவார், சீடன் கற்க விழையும் போது! அது போல் ஒரு குரு வருகிறார் நம்மைத் தேடி! நம்மாழ்வாரின் இயற்பெயர் மாறன் சடகோபன்! சடாரிக்குப் பெயரும் சடகோபம் தான்! வைணவ மரபில் அவர் தான் ஆதி குரு! அவர் தான் சடாரியாக வருகிறார் நம்மிடம்! அவரே இறைவனின் சடாரியாக இருந்து, அவன் பாதங்களை, நம்மை நோக்கிக் கொண்டு வந்து கொடுத்து, நம்மை உய்விக்கிறார்! - இதுவே சடாரியின் தத்துவம்! சரி, அதற்கு ஏன் கிரீடம் போல ஒரு அமைப்பு?

நம்மைச் சிறப்பித்து, நமக்கு்த் தலையில் சூட்டினா, உச்சி குளிர்ந்து விடாதா? வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், உள்ளே கொஞ்சமாச்சும் புளகாங்கிதம் அடைவோம் அல்லவா? :-) "தலை" மேல தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறான், "தலை" கால் தெரியலை அப்படி-ன்னு பேச்சு வழக்கில் கூட, எண்சாண் உடம்புக்கு "தலையே" பிரதானம்! என்னா "தல", செளக்கியமா-ன்னு தான் நாமளும் கேக்கறோம்! "தலை"யாய ஒன்றுன்னு தானே இலக்கியங்களும் சொல்கின்றன! இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!

இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!ஆனா கிரீடம் தான் உண்மையான அணிகலனா? இல்லை! - அதுக்கு மேலேயும் ஒன்னு இருக்கு! உலகத்தில், தலை மேல் வைத்துக் கொண்டாட வேண்டிய ஒரே பொருள் எது? - இறைவனின் திருப்பாதங்கள் தான்! - எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்பது தான் வள்ளுவம்! அவன் மலரடிகளைச் சூட்டிக் கொள்வதை விட பெரும்பெருமை வேறெதுவும் இல்லை!

அருமை! மிக்க நன்றி:

February 02, 2011

யார் உண்மையான துறவி? (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)

கால நேரத்திற்கு அப்பாற்பட்டு ஊழல்கிறது பொய்மையும் கபடமும். இரட்டைகளான துக்கம் சுகம், புகழ்ச்சி, இகழ்வு என்பதைப் போல், சத்தியத்தின் இரட்டையான பொய்மையும் தன் பணியைத் தொடர்ந்தவண்ணமிருக்கிறது. பிறரை ஏமாற்றி தன் ஜீவனத்தை நடத்தும் இழி நிலைக்கு பாபச் சுமை அதிகம். அதிலும் புனிதனைப் போல் வேடமிட்டு ஏய்ப்பது மிகப் பெரிய பாபம். ஜடை முடி தரித்தலும், காவியுடையும் பெரும் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் பாத்திரமானவை. அவற்றை தவறாக பயன்படுத்துபவன் மூடன். அந்த பாபத்தின் வீர்யம் அறியாதவன். இவர்களைப் பற்றி ஆதிஷங்கரர் பஜகோவிந்தத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


" ஜடிலோ முண்டி லுஞ்சித கெஷ:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ
ஹூதர நிமிதம் பஹுக்ருத வேஷ: "
-பஜகோவிந்தம்

சடை முடி வளர்ப்பதும், மொட்டையடிப்பதும், காவியுடை அணிவதுமாய் பல வித வேடம் அணிந்து மூடர்கள் வயிற்றை வளர்க்கிறார்கள். அவர்கள் கண் இருந்தும் குருடர்கள்.

வேடமணிந்த சிலரோ சித்து வேலைகள் செய்தும் பெருவாரியான மக்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்கின்றனர். சாமான்யர்களால் எப்படி சித்து வேலை செய்ய முடியும்? அப்படியெனில் அவர்கள் சித்தர்களின் பாதையில் பயணிப்பவர்களாகத் தான் இருக்க வேண்டும். "சித்தி" அடைந்தவுடன் மோக்ஷமோ, முக்தியோ கிடைப்பதில்லை. அவர்கள் முற்றும் துறந்த சன்யாசி, ஞானி ஆகிவிடுவது இல்லை. உண்மையான சித்தர்களும் யோகிகளும் சித்தி அடைவதை தன் இலக்காக கொள்ளுவதில்லை. அது ஒரு நிலை மட்டுமே. அதைத் தாண்டி தம் பயணத்தை தொடர்ந்த வண்ணமிருப்பர். அவர்கள் ஒழுக்கம் தவம் மூலம் பல ஷக்திகளைப் பெறுகின்றனர்.

சித்தி பெற்றதும் கூட அஹம் மட்டுப்படாமல் அந்த ஷக்திகளைக் கொண்டு ஏய்க்கும் வேலையில் ஈடுபட்டால் அவர்கள் தம் பாதையினின்று வழுவி விழுந்து விடுகின்றனர். அதைத் தாண்டி செல்பவனே உண்மையான யோகி. பெயர் பெற்ற பதிணென் சித்தர்களைத் தவிரவும் நிறைய சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அஷ்ட மஹா சித்திகள் எனும் எட்டு சித்திகள் கை வரப் பெறுபவன் சித்த நிலையில் இருப்பவனாக கருதப்படுகிறான். அணிமா, மஹிமா, லஹிமா, கரிமா, ப்ரபத்தி, ப்ரகாமீயம், ஈசாத்வம், வசித்வம் என்பன அவை.

அணிமா: அணுவை விட சிறிய உருவம் எடுப்பது / ஆக்குவது
மஹிமா: மலையைக் காட்டிலும் பெரிய உருவம் கொள்வது / ஆக்குவது
லஹிமா: காற்றை விட மென்மை ஆகுவது / ஆக்குவது
கரிமா: மெல்லிய ஆனால் சுமக்க முடியாத கனமான உருவம் கொள்வது /ஆக்குவது
ப்ராப்தி: எண்ணிய பொருள் கையில் வரவழைப்பது
ப்ராகாமீயம்: எந்த வடிவமும் எடுப்பது
ஈசாத்வம்: தேவர்களும் வணங்கக் கூடிய தன்மையை பெறுவது.
வசித்வம்: கிரஹங்கள் நக்ஷத்திரங்கள் முதலியவற்றை அடக்கும் ஷக்தி கைவரப் பெறுவது.

இவற்றையெல்லாம் அடைந்த ஒருவன் அகங்காரத்தை கட்டுப்படுத்தாமல், ஆசைகள் கொண்டு திரிந்தால் அவன் முயற்சி அனைத்தும் வீண். ஆசைகளை அடக்குவதே யோகத்தின் உயரிய நிலை. அஹத்தை மட்டுப்படுத்துதலே ஞானத்தின் முதல் கட்ட நிலை.
"அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபின முஞ்சதி ஆஷா பிண்டம்"
-பஜகோவிந்தம்

உடல் தளர்ந்து விட்டது, பல் விழுந்து, முடி நரைத்து, கையில் கோலின் துணையின்றி இருக்கும் ஒருவனுக்கும் ஆசை விட்டபாடில்லை.

ஆண் / பெண், முதியவன் / இளையவன், சில சித்தர்கள் / சாமான்யர்கள் என பலரையும் ஆட்டுவிக்கிறது ஆசை!
ஆசைகளால் கட்டுப்படுத்தப் படாதவன் துறவி.

January 26, 2011

தெய்வ குணம் (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)

செயலின் விளைவுகள் கர்மயோகியை கட்டுப்படுத்துவதில்லை என்று படித்தோம். கேட்டோம். உணர்ந்தோம். ஆயினும் அதன்படி நடக்க ஏறக்குறைய நம்மில் பலரால் இயலுவதில்லை. அஹம் கட்டுப்படுத்தபடாததால், அது கட்டுண்டு உடம்பினுள் உழலும் இந்த ஜீவன் மட்டுமே 'நான் என்ற நினைப்பில் செயல்களை செய்கிறது. செயலுக்குறிய விளைவும் இலக்குக்குறியவனை மட்டுமின்றி, செய்தவனையும் பாதிக்கிறது. இத்துடன் நின்றுவிடுவதில்லை. ஒவ்வொரு செயலுக்கும் தொடர் விளைவுகள் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.

வீட்டில் சண்டையிட்டு வந்த முதலாளி தன் இயலாமையின் வெளிப்பாடை கோபத்தின் மூலமாக வேலையாளிடம் காண்பிக்கிறான் என்பது நகைச்சுவை துணுக்காக மட்டுமின்றி மனோவியல் விதிப்படியும் சரியாகிறது. சிறு செயல் முதல் பெரிய மகத்தான செயல்கள் வரை அனைத்திற்கும் விளைவுகள் உண்டு. அடி முடி அறியமுடியாத படி விளைவுகள் நடைமுறை வாழ்வில் பின்னிப்பிணைந்திருக்கிறது. தனிப்பட்ட ஒரு மனிதனின் நிலைமைக்கு காரணம் இன்னார் அல்லது இன்ன செயல் என கூறிவிடுகிறோமே தவிர, அவனின் செயலுக்கோ நிலைமைக்கோ, புரிந்தும் புரியாததுமாய் பல பிரபஞ்ச தொடர் நிகழ்ச்சிகளும் காரணம் ஆகின்றன. அவரவர் வினைப்பயன் என்றும் இதை சொல்லக் கேட்கிறோம். நன்மை பயக்கும் ஒருவரின் செயல் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பொழுது, சில நேரம் நன்றி நவில்கிறோம், பல நேரம் மறந்தும் விடுகிறோம். அதே நேரத்தில் நமக்கு கேடு விளைவிக்கும் வண்ணம் நடைபெறும் செயல்களை நம்மால் மன்னிக்க முடிவதில்லை. ஒவ்வாத செயல்களை செய்தவனை 'வினை-விதைத்தவன்' என்ற நோக்க்கத்துடனேயே அணுகுவதால், அவனிடம் பெரும்பாலும் அன்பு துளிர்ப்பதில்லை. செயல்கள் அனைத்துமே தொடர் நிகழ்ச்சிகளின் பிரதிபலிப்பே, அதுவும் நம் விதிக்கு உட்பட்டே நடைபெறுகிறது என்ற தெள்வு பிறந்தால் எவ்வித மனக் கசப்பும் பிற ஒருவரிடம் ஏற்படுவதில்லை. அப்படியே ஒருவன் தீங்கு இழைத்தாலும் அதை மன்னிக்கும் பக்குவம் வந்துவிடும்.

தவறிழைப்பது மனித இயல்பாகவே இருந்தாலும், அதனை பெருந்தன்மையோடு மறப்பதும் மன்னிப்பதும் தெய்வ குணமாகவே கருதப்படுகிறது. மன்னிக்க முடியாத குற்றம் ஒருவன் புரிந்து விட்டால் அவன் கதி என்ன? அப்படிப் பட்ட கொடும் செயலும் மன்னிக்கப்பட்டு விட வேண்டுமா? எதைத் தான் மன்னிப்பது என்ற வரையறை வகுக்கப்பட வேண்டுமா? இவ்விஷயத்தை குறித்த சர்ச்சை மஹாபாரத்தத்தில் த்ரௌபதி-யுதிஷ்டிரர் இடையே எழுகிறது. "எப்படிப்பட்ட தவறை எவர் செய்திருப்பினும் மன்னிக்கும் குணம் க்ஷத்திரிய லக்ஷணமே அல்ல" என்று வாதிடுகிறான் பீமன். "எதையும் எப்பொழுதும் மன்னிக்கும் குணமுடைய ஒருவன் அரசாண்டால், மக்களும், மற்றவரும் அவனை எளிதாக மதிப்பிட்டு விடக் கூடுமாகிறது. பிரஹலாதன் தன் பேரன் மஹாபலியின் சந்தேகத்தை போக்கும் பொருட்டு, ராஜ குணம் பொருந்தி அரசாள்பவனின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளக்குகிறான். எதையும் எப்பொழுதும் எளிதில் ஜீரணித்து மன்னித்து விடுபவனை மற்றோரும், உற்றோரும் ஏன் பணியாட்களும் கூட ஒரு பொருட்டாய் மதிப்பதில்லை என்று ப்ரஹ்லாதன் கூறுகிறான்" என்று எடுத்துக்காட்டுகிறாள் த்ரௌபதி. ஒருவன் தெரியாமல் தவறிழைத்தால் அவன் மன்னிக்கப்படவேண்டியவன். தவறினை சுட்டிக்காட்டி மன்னிக்கவேண்டியதே தர்மம். இரண்டாம் முறையும் அவன் தவறிழைத்தால் அவன் தண்டனைக்கு உரியவனே என்று வாதிடுகிறாள்.

அதற்கு பொறுமையின் இருப்பிடமாம் தர்ம புத்திரரின் விடை அவரின் முதிர்ச்சி நிலைக்கு எடுத்துக்காட்டாய் அமைகிறது. "மன்னிப்பே உலகத்தில் சிறந்ததும், மேன்மையானதும், கீர்த்தியளிக்க வல்லதும் ஆகும். அதை விட சிறந்த மேன்மையான விஷயம் இன்னொன்றில்லை. ஒவ்வொருவரும் பதிலுக்கு பதில் விரோதமும் பேச்சும் வளர்த்து விட்டுக்கொண்டிருந்தால், அது முடிவற்று நீண்டு கொண்டே இருக்கும். எந்த ஒரு விரோதமும் முடிவுக்கு வர மன்னிப்பும் பொறுமையும் அவசியம். மன்னிக்கும் செயல் பிரம்மத்துக்கு ஈடானது. அதுவே சத்தியம்."
இப்படி ஒரு பதில் அளிக்க எப்பேர்பட்ட பரந்த மனம் படைத்திருக்க வேண்டும்!

'தவறிழைப்பது மனித குணம். அதை மன்னிப்பது தெய்வ குணம்!'

January 21, 2011

நாம ஸ்மரணம் (சோ-வின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)


கர்ம சன்யாசம் யோகம் பற்றி தனி அத்தியாயமே கீதையில் இருக்கிறது. செயல்களின் பலனை துறந்தவனே உண்மையான கர்ம யோகி. அப்படிப்பட்டவன் பரிபூர்ண உள்ளார்ந்த பக்தியில் திளைக்கிறான். இன்ப துன்பங்கள் அற்று விடுவதில்லை, அவற்றை சமமாக பாவிக்கும் மன நிலையை பெறுகிறான். 'ஸ்தித ப்ரக்ஞன்' நிலையில் இருந்து கொண்டு செயல்களை செய்கிறான்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச

"எல்லா தர்மங்களையும் அதன் பலங்களையும் விட்டு விட்டு என் ஒருவனையே ஷரணம் என்று பற்று வைத்தவனை நான் எல்லா பாபங்களிலினின்றும் விடுவிக்கிறேன். வருந்தாதே" என்று ஆறுதல் அளிக்கிறான் பகவான். எல்லா தர்மங்களை என்றால் செயல் செய்வதை விட்டுவிடுவது என்று பொருள் கொள்வதல்ல. செயலின் பலன்களை விட்டு விடுவதே வலியுறுத்தப்படுகிறது. தர்மமோ, சாஸ்திரமோ சம்பிரதாயமோ விதியோ அப்படிபட்ட கர்ம யோகியை ஒன்றும் செய்வதில்லை. சட்டையைப் போன்ற இந்த உடம்பின் பால் உள்ள பற்றும் அதன் பொருட்டு வரும் பிணைப்புகளையும் பிரித்துணர்ந்து, கர்மயோகியாய் வாழ்பவனை கர்மங்கள் பற்றுவதில்லை. கண்ணபரின் பக்தி சாதாரணன் பார்வைக்கு தர்மங்களை விட்டு விலகியே இருந்தது. தர்மத்தின் வழியைத் தாண்டி ஆறாய் பெருக்கெடுத்து ஓடிய அவர் பக்தி, கர்மங்களினின்று அப்பாற்பட்டு நின்றது. இறைவனுக்கு மாமிசத்தை உணவாக படைத்து, தன் உமிழ் நீரால் அபிஷேகம் செய்து, தன் தலை பூவையே அர்சித்த பக்தர். இறைவனின் கண்ணில் இரத்தம் வழிவதைக் கண்டு, சாமான்ய பக்தனைப் போல் பரிதவிக்காமல், பதற்றம் கொள்ளாமல், தர்மம் அதர்மம் என யோசிக்காமல், தாமதிக்காது தன் கண்ணையே பெயர்த்து கொடுத்து கண்ணப்பன் ஆனார். க்ரமமாகவும் சாஸ்திர சம்பிரதாயதுடனும் செய்யும் பக்தனைக் காட்டிலும் உயர்ந்து நின்றார். வேட்டையாடி திரிந்த அவருக்கு சிவபக்தி ஆட்கொண்டதும், பக்தியின் உச்சத்தை எட்டி பிடித்தது எல்லாமும் மொத்தமுமாக ஆறே நாட்களில் நிகழ்ந்ததாக பெரிய புராணம் கூறுகிறது. இறைவனை விட்டு க்ஷண நேரம் அகல மனமில்லாத உயர்ந்த பக்தி கொண்டிருந்தார். இவர்களை கர்மங்கள் பீடிப்பதில்லை. ஏனெனில் பலன் பற்றி எண்ணமே அற்று இருக்கிறது இப்படிப்பட்டவ்ர்களின் செயல்கள்.


"உன்னால் யோகியாக கர்மங்களை செய்ய முடியாவிட்டாலும், ஞானியின் நிலையில், இரட்டைகள் அற்று தன்னையே எங்கும் எதிலும் காண்பவனாக உயர முடியாவிட்டாலும், மாறாத பக்தி செலுத்தும் பக்தனாக இல்லாவிட்டலும் கூட இறைவனை அடைய ஒரு வழி இருக்கிறது" என்கிறது கீதை. "மேலும் கடைசி தருணத்தில் ஒருவன் இறக்கும் தருவாயிலேனும் என் நாமத்தை ஸ்மரித்தால் அவன் என்னையே வந்தடைகிறான்" என சந்தேகத்திற்கு இடமின்றி நம்மை தெள்விக்கிறான் கண்ணன்.

அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரன் முக்த்வா கலேவரம்
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்சய:
- பகவத்கீதை

இறக்கும் தருவாயிலாவது இறைவனைப் பற்றிய ஒரு நொடி நினைப்பே போதுமானது. இறுதியில் அவன் இறைவன் அடி சேர்கிறான். பாபங்கள் செய்த ஒருவன் இறக்கும் தருவாயில் இறைவன் நாமத்தை சொன்னால் அவன் நற்கதி அடைவது எவ்வாறு சாத்தியம்? என்று ஐயம் தோன்ற சாத்தியம் உண்டு. பாகவதம் விளக்கும் கதையின் சாரம் இறைவனின் திருநாமத்தின் பெருமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

அஜாமலன் எனும் பக்தன் தான தர்மங்கள் புரிந்து நல்வாழ்கை நடத்தி வந்தான். நங்கையின் பால் காதல் கொண்டு இல்லறம் புகுந்த பின், இல்லற சுகத்தில் தன்னையே மறந்து, நற்காரியங்கள் செய்வதும், பக்தி செய்வதும் கூட குறைந்து விடுகிறது. இப்படியே வாழ்நாள் முழுவதும் கழித்த அவன், இறக்கும் தருவாயில் "நாராயணா" என்று தன் மகனை கூப்பிடும் தருணத்தில் உயிர் பிரிகிறது. அப்பொழுதும் அவன் பகவானை நினைத்தவன் இல்லை. அவனை இட்டுச் செல்ல யமனின் கிங்கரர்கள் வருகிறார்கள், அவர்களை அப்புறம் போகச் சொல்லி, விஷ்ணு தூதர்கள் அவனை விஷ்ணு லோகம் இட்டு செல்கிறார்கள். இறைவன் சிந்தனை அற்று இருந்த போதும், நாராயணன் நாமத்தை இறக்கும் தருவாயில் உச்சரித்ததற்கு அத்தனை பலன்! இதில் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று உள்ளது. இறக்கும் தருவாயில் எவனுக்கு இறைவன் நினைவு வரும்? குறைந்த பட்சம் இறைவன் நாமத்தை உரைக்கும் பாக்கியம் எவனுக்கு கிட்டும் என்றால், எவன் ஒருவன் அதிக நேரம் இறை பக்தியில் ஈடுபட்டுள்ளானோ அப்படிப்பட்டவனுக்குத் தான் தன்னை மறந்த நிலையிலும் கூட, நினைவிலும், கனவிலும் கூட இறைவன் நினைவும், தியானமும் அல்லது அவன் நாமமும் உச்சரிக்கும் எண்ணம் வரும்.

மனிதனைப் போல சாமர்த்தியசாலிகள் காண்பதரிது. சிவன் வரம் கொடுக்க எத்தனிக்கும் போதெல்லாம், மூப்பும் சாகாவரமும் பெறவதற்கு பலவாறாக யோசித்து சாமர்த்தியமாய் வரம் கேட்பதும், அப்படியும் கூட எப்பேர்பட்டவனுக்கும் மரணம் சம்பவிப்பதும் நமக்கு தெரிந்ததே. இறக்கும் தருவாயில் எப்படிபப்ட்ட சூழ்நிலையில் நாம் சிக்கியிருப்போம் என்று சொல்ல முடியாது. நினைவிழந்து இருக்கலாம். உறக்கத்தில் அமிழ்ந்து விடலாம், சாவின் பயம் பற்றிக்கொண்டு பரிதவிப்போடு இருக்கலாம், பாசப் பிணைப்பில் பக்கத்தில் பந்துக்களின் முகம் பார்த்துக்கொண்டு கட்டுண்டு இருக்கலாம். இதில் எத்தனை பேர் இறைவனை நினைக்கவோ, அல்லது பேயரை உச்சரிக்கவோ செய்கின்றனர்? நம்மைப் போன்றோரின் சார்பாக பெரியாழ்வார் இறைவனை முன்னமே வேண்டுகிறார்.

"இறக்கும் நேரம் நான் வியாதியில் வீழ்ந்து விட்டால் அங்கு உன்னை நினையேனோ மாட்டேனோ, ஆதலால் நாராயணா, அப்போதைக்கு இப்போதே உன் பெயரை சொல்லி வைத்தேன், நீ கணக்கில் வைத்துக்கொள்" என்று நம்மைப் போன்ற சாதார்ணர்களுக்காகவே சிறப்பு மிக்க இப்பாடலை இயற்றியுள்ளார்.

எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே!
- பெரியாழ்வார்

அந்த மஹானுக்கு நன்றி கூறி, மேலே கூறிய வரிகளைக் நினைவு கூர்ந்து, அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்து, இறைவனை தினமும் வணங்குவோம்.

January 20, 2011

பஞ்சதந்திர கதைகள் (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)

நம்மில் சிலருக்கு இறைவன் இருக்கின்றானா என்றே சந்தேகம் வருகின்றது. கண்ணுக்கு புலப்படாத வஸ்து என்பதால் நம்புவது சாத்தியமாவதில்லை. மேலும், நமக்கு சாதகமான காரியம் நடைபெறாவிட்டால், கோபம் கொண்டு இறைவனை சந்தேகிக்கிறோம். உலகில் நடைபெறும் பல அதர்மங்களும் கொடூரங்களும் இன்னல்களும் வக்ரங்களும் பல்கிவிட்ட நிலையில் சந்தேகம் இன்னும் வலுவடைகிறது. இறைவன் என்ற தத்துவமோ, அல்லது எதுவுமோ கூட, நம்பினாலேயொழிய நமக்கு கிட்டுவதில்லை. சந்தேகம் என்பது நம்மை சாதிக்க விடாது செய்யும் வியாதி. சந்தேகம் எவர் மீது விழுந்தாலும், நம் திறமை மீதே அமைந்துவிட்டாலும் கூட அதனால் பாதகமே அதிகம் விளைகிறது. நம்பத் தகுந்த விஷயங்களை நம்புவதால், சாதாரண நம்பிக்கை தாண்டிய, "பரிபூரணமாக" நம்பிக்கை வைப்பதால் அரிய விஷயங்களை கிடைக்கப் பெறலாம். விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் பலவும், நாம் நம்ப மறுத்த ஒன்றை அவர்கள் நம்பியதால் நிகழ்ந்த வினோதங்கள்.

"சந்தேகம் கேட்டையே விளைவிக்கும்" என்ற கருத்தை வலியுறுத்த பீஷ்மரும் யுதிஷ்டிரரருக்கு சிறு கதையின் மூலம் படிப்பிக்கிறார்.

காட்டில் ஒரு நரி, சிறந்த நற்குணங்களும், தர்ம சிந்தனையும், ஒப்பற்ற அறிவும் கூடியதாய் வாழ்ந்து வருகிறது. மற்ற மிருகங்களுக்கும் படிப்பினை போதிக்கிறது. "ஒருவனின் குணம் அவன் இருக்கும் இடத்தை பொருத்து அமைவதில்லை. அவனின் அறிவும் மனமுமே நிர்ணயிக்கிறது. ஒரு ஆசிரமத்தில் கொலை நிகழ்ந்துவிட்டதால், ஆசிரமம் புனிதம் என்பதால், கொலை பாபம் வந்து சேராது இருக்குமா?" என்றெல்லாம் வியாக்கியானம் செய்கிறது. இதனை கேட்ட புலி மிகவும் புகழ்ந்து நரிக்கு அமைச்சர் பதவியை வழங்குகிறது. நரி முதலில் மறுக்கிறது "ஸ்திரமற்ற ராஜாவின் புத்தி, பின்னாளில் சந்தேகத்தின் பேரில் மாறக்கூடும், எனக்கு பதவி வேண்டாம்" என்கிறது. புலியோ நரியை போல் அறிவாளியை கண்டதில்லை, சந்தேகத்துக்கு இடமின்றி நரி அமைச்சர் பதவியை ஏற்கவேண்டும் என்று வற்புறுத்த நரி பதவி ஏற்கிறது.

நாளடைவில் மற்ற மிருகங்கள் நரியிடத்து பொறாமை கொண்டு அதன் பேரில் பொய்யாய் களங்கம் கற்பிக்கின்றனர். புலி அதனை நம்பி கோபம் கொள்கிறது. நரியோ, அமைதியாய், "உன் குணம் சந்தேகத்திற்கு உட்பட்டது என்று தெரியும்" என்று அமைதியாய் பதவியை விட்டு அகல்கிறது. புலி பின்னர் உண்மை உணர்ந்து தன் தவறை நொந்து மன்னிப்புக் கேட்டும், நரி மீண்டும் பதவி ஏற்க மறுத்து புலிக்கு நல்லாசி கூறி புத்திமதி வழங்கிவிட்டு, மற்ற மிருகங்களை விட்டு ஒதுங்கி தவ வாழ்கையை மேற்கொள்கிறது.
பஞ்சதந்திரக் கதையைப் போலவே இருக்கும் இக்கதையின் மூலம் பொறாமை என்னும் அழுக்கை களைவது சுலமபல்ல என்று புரிகிறது.

* கெட்ட நடத்தையுடையவன் நல்லவனை பார்த்து பொறாமை கொள்கிறான்.
* முட்டாள் பண்டிதனை பார்த்து பொறாமை கொள்கிறான்.
* இல்லாதவனுக்கு இருப்பவனிடத்து பொறாமை.

அழுக்காறு என்று சொல்லப்படும் ஒழிக்கவேண்டிய ஆறு அடிப்படை குணங்களின் (காமம், க்ரோதம், மோஹம், லோபம், மதம், மாத்ஸர்யம்) வேறுபட்ட வெளிப்பாடே பொறாமை. பொறாமையினால் தெளிந்த சிந்தை குழம்பி மனவருத்தமும் விரோதமும் வளர்கிறது. தெரிந்தோ தெரியாமலோ நம் நட்பு கொள்ளும் நபருடன், "கடும்" விரோதம் வளர்ந்து விட்டால் அதை இனி தொடர்வது உசிதமா என்ற யுதிஷ்டிரரின் கேள்விக்கும் பீஷ்மர் பதில் அளிக்கிறார்.

ஒரு ராஜாவின் அரண்மணையில் விசேஷ ஞானம் பொருந்திய குருவியும் அவருடன் நட்புடன் பாராட்டியபடி வளர்ந்து வருகிறது. நாளடைவில் ராஜாவிற்கு மகன் பிறக்கிறான். குருவிக்கும் குஞ்சு பிறக்கிறது. இளவரசனும் இளம் குருவியும் அவர்கள் பெற்றோரைப் போலவே நட்பு பாராட்டி விளையாடி வருகின்றனர். ஒரு சமயம், அவசர புத்தி காரணமாக குருவிக் குஞ்சுவின் கழுத்தை நெரித்து, இளவரசன் கொன்று விடுகிறான். கடும் கோபம் கொண்ட குருவி, இளவரசனின் இரு கண்ணையும் நோண்டி புண்படுத்திவிடுகிறது. முதலில் ராஜா கோபம் கொண்டு வெகுண்டாலும், தவறு இளவரசன் பேரிலும் இருப்பதால் குருவியை மன்னித்து விடுகிறார். குருவி வேறு இடம் பறந்து செல்ல எத்தனிக்கிறது. ராஜாவோ இரு சாராரும் மறந்து, மன்னித்து விடுவொம், அதனால் இங்கேயே தங்கிவிடு என்று கூறுகிறார். அதனை மறுத்து குருவி, "கடும் விரோதம் வளர்ந்த இடத்தில், இருப்பது உசிதம் அல்ல. சில தீங்குகள் எளிதில் மன்னிக்கப்படுவதும் இல்லை. அதன் பாதிப்பு அடங்குவதும் இல்லை. ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்தால் மனக் கசப்பும் வருத்தமும் மேலிடும், அத்தகைய உறவில் சுமூகம் இருப்பதில்லை. எனவே என்னை போகவிடு" என்று சொல்லி பறந்து விட்டது.
விரோதத்தை மன்னித்து விடுவதே உசிதம் என்றாலும் கூட எப்படிப்பட்ட விரோதம் என்பதை ஆராய்ந்து உறவின் பலமோ முறிவோ ஏற்படுகிறது.

January 18, 2011

ஆடுகளத்தில் வென்ற வெற்றிமாறன் (திரைப்பார்வை)



வட்டார மொழியில் முங்கி முத்தெடுக்க தெரியாதவர்களுக்கு படத்தை ரசிப்பது கடினம். ரசிப்பதென்பது பெருந்தூரம், படத்தின் மையக் கதை புரிவதே பெரும்பாடு. இப்படியெல்லாம் அவசரப்பட்டு நினைத்ததென்னவோ உண்மை. சத்தியமாக வட்டார மொழி புரியவில்லை. "சேவல்"ஐ "சாவல்" என்று குறிப்பிடுகிறார்கள் என்று ஏறக்குறைய முக்கால் மணி கழித்தே புரிந்தது. மொழியால் அந்நியப்படுத்திய போதும், கதை சொல்லும் விதத்தில் கட்டிப் போடுவது பாராட்டுக்குறிய திறன்.

முதல் ஒரு மணிநேரத்திற்கு கால், வால். தலை, மூக்கு என புரியாமல் பிய்ந்து, தொங்கும் கதையை, அழகான ஒவியமாக அடுத்த பாதியில் முடித்துக் கொடுக்கிறார். Rustic-rural story என்றால் காத தூரம் ஓடும் நகர்புற மக்களையும் கட்டி இழுப்பதற்கு அசாத்ய திறமை வேண்டும். சொல்லப்பட்ட கதையோ நமக்கு புரியாத விளையாட்டுத் துறையைப் பற்றியது. அதற்கென ஒரு பாரம்பர்யம், பயிற்சி எல்லாம் இருப்பதே பலருக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. களத்துமேட்டுக் காதல் கதை, அண்ணன் தங்கச்சி பாசம், ஊர் வன்முறை என தெரிந்த கோணங்களில் படம் பண்ணியிருந்தால் commercial hit. இது போன்ற அபூர்வ கதைக்கருவுக்கு மெருகூட்டி, அது சொல்லப்பட்ட விதத்தில் புது பரிமாணம் காட்டி, வெல்வதென்பது திறமை மட்டுமல்ல துணிச்சலான செயலும் கூட.

தனுஷ் என்ற நடிகனை பாராட்டியே ஆக வேண்டும். பத்தோடு பதினொன்றாக இதுவும் ஒரு படம் என்று, படம் பண்ணுவதே இல்லை. பஞ்ச் டயலாக் பேசி பஞ்சாய் பறந்து அடிக்காமல் யதார்த்த கதைகளில் அதற்கெனவே படைக்கப்பட்ட "Guy next door" முகததை பயன்படுத்தி நம்முடன் இயல்பாக ஒன்றிவிடுகிறார். போக வெண்டிய தூரத்தை கணக்கிட்டு தரமான வித்தியாசமான கதைகளும் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் பாத்திரங்களும் தேர்ந்தெடுத்து வெற்றி நடை போடுவது நிஜம். வாழ்த்துவோம்.

காதல் என்பதைச் சுற்றி கதை நடைபெறவில்லை. அது ஒரு அத்தியாயமாக பின்னப்பட்டிருக்கிறது. அந்த அத்தியாத்திற்கு தேர்ந்தெடுத்த நடிகை தன் பங்கை செவ்வனே செய்திருந்த போதும், ஜி.வி.ப்ரகாஷ் பாடல்களால் மனதை இதமாக ஒற்றி எடுத்த போதும், காதல் சொல்லப்பட்ட விதத்தில் ஒரு மொழம் பூவை தாராளமாக காதில் சுற்றியிருக்கிறார்கள். காதலுக்கு கண்ணு இல்லை என்பதெல்லாம் அந்தக் காலம். இந்தப் படத்தின் காதலுக்கு அறிவே இல்லை. அதனால் தான் அதற்குப் பெயர் காதலோ என்னவோ!!

படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் தம் பங்கை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். கதை இப்படித் தான் நகரப் போகிறது என்று நம்மால் யூகிக்க முடியாத அளவு twist கொடுத்திருப்பதில் தான் கதையின் வெற்றி சிம்மாசமிட்டு அமர்ந்திருக்கிறது. மொழி புரியாத போது சற்றே ஆறுதலாக நம்மை உட்கார்த்துவது ராதாரவியின் பரிச்சயமான குரல். இறுதி வரை, நம்மை கட்டிப்போடுவதில் அக்குரலுக்கும் பங்குண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, யதார்த்தம் என்ற பெயரில், வெட்டு, குத்து, ரத்தக்களறி, மனநிலைகுன்றிய மனிதர்களின் வலி இப்படி படம் பண்ணி, நம் வாழ்வில் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்சசந்தோஷத்தையும் திரையரங்கில் பறிகொடுக்காமல் பண்ணியிருப்பதற்கு இயக்குனர் இரண்டு கைதட்டல் அதிகம் வாங்குகிறார்.

கதையின் சுருக்கம்: மனித மனம், அதன் போக்கு, அது சந்திக்கும் ஏமாற்றங்கள், வெற்றிகள், அதனால் அது செய்யும் செயல்பாடு எதுவும் கணிக்க முடியாதது. அதுவே ரத்தவெறி பிடித்து அலைய வல்லது. மனிதச் சேவல்களை ஏவி வேடிக்கைப் பார்க்கும் god father. Very crisp presentation.

இப்படத்தை,
வேறு மாதிரி நகர்த்தியிருந்தால் - சுமாரான படம்
வேறு மாதிரி முடித்திருந்தால் - வழக்கமான படம்
இப்படி நகர்த்தி இவ்வனே முடித்துள்ளதால் - விருது வாங்கத் தகுந்த படம்.

Story telling is an art. Approach towards story telling = crowing glory.

படத்தின் மெருகு - தனுஷ்
படத்தின் அழகு - யதார்த்தம்
படத்தின் வெற்றி - கதை / கதைக் களம் / இயக்கம் / வெற்றி மாறன்.

தனுஷ் உட்பட எல்லா கலைஞர்களையும் தாண்டி வெற்றிமாறன் தனியாக மிளிர்கிறார். திரைத்துறையின் ஆடுகளத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளி வீசுகிறார் அடுத்தடுத்து பல திறமையான ஆட்டத்தை எதிர்பார்ப்போம்.

ஹனுமன் ( ( சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து)



ஹனுமனை இறையம்சமாக வழிபடும் பக்தர்கள் பலர். ஆலயங்களின் அருகாமையில் அல்லது ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பொழுது குரங்குகள் கண்ணில் பட்டாலும் அனுமன் அம்சம் என்று பயபக்தியோடு நினைத்துக்கொள்பவர்களும் உண்டு. பெரும்பாலும் அப்போது நமக்கு இருக்கும் மனநிலையே இதற்கு காரணம். மற்ற காட்டுக் குரங்குகளுக்கோ அல்லது மற்ற நேரத்தில் தென்படும் குரங்குகளுக்கு அந்த மரியாதை கிடைப்பதில்லை. கேள்வி இங்கே என்னவென்றால், அனுமனோ, வாலி, சுக்ரீவர் கூட்டதவர்களோ (சற்றே அறிவு முதிர்ச்சி எய்திய) குரங்குகளா? பரிணாம நிலையில் அறிவு முதிர்ச்சி எய்திய குரங்கு மனிதனுக்கு முதல் கட்ட நிலை.


இங்கு கூறப்படும் சுக்ரீவ வாலிகள் குரங்கினின வரிசைகளின் பரிணாம வளர்ச்சியை கடந்த நிலையில் இருப்பதைப் படித்து தெரிந்து கொள்கிறோம். சுக்ரீவன் வாலி போன்றோர் மெத்தப் படித்தவர்கள். அவர்கள் பராக்ரமமும், அறிவு முதிர்ச்சியும், சிந்தனையும் மனிதனுக்கு ஒப்பாக கருதக்கூடியது. பலவித சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் எனவும், அவர்களால் கட்டப்பட்ட கட்டிடங்களும் அரண்மணைகளும் அற்புதமென வியக்கும் வண்ணம் அமைந்திருந்ததாக இதிஹாச வரலாறு எடுத்துரைக்கிறது. இவர்களை "வானரங்கள்" என்று கூறுவதே முறையாம். வானரங்களை பொதுவாக குரங்குகள் என்றே நாம் நினைத்தாலும், ராமாயணம் நடந்தது த்ரேதா யுகத்தில், அந்த யுகத்தில் வானரர்களும் இத்துணை மெத்த அறிவுடையவர்களாக இருந்திருக்கின்றனர். சாதாரண குரங்குகள் என்று நினைத்து விடாமல், அவர்களை வானரங்கள் என்று விசேஷமாய் பிரித்துப் பார்ப்பதே தகும்.

மேலும் ஜாம்பவான் ஹனுமனின் பராக்ரமத்தை எடுத்துரைக்கையில் "ஹனுமனே நீ சாமான்யன் அல்ல, ராம லக்ஷ்மணர்களுக்கு சமமான தேஜஸைப் பெற்றவன்" என்கிறார். ஹனுமன் வாயு பகவானுக்கு அஞ்சனைக்கும் பிறந்தவர். ஹனுமன் புகழுரைக்கும் வாயு பகவான், "ஹனுமன் பெரிய வீரன், சிறந்த அறிவாளி, எனக்கு நிகரானவன்" என்று வாய்மொழிகிறார்.

ஹனுமனை வணங்கும் ஸ்லோகம்:


"அசாத்யம் சாதக ஸ்வாமின்
அசாத்யம் தவ கிம் வத
ராம தூத க்ருபா சிந்தோ
மத் கார்யம் சாதய ப்ரபோ"

"சாத்யம் மீறிய அரிய செயல்களை செய்யும் இறைவனே, உங்களுக்கு செய்ய முடியாததென ஏதேனும் உண்டோ?! ராமனின் தூதனே கருணை கொண்டு என் கார்யத்தை சாதிக்க அருள் புரியுங்கள் ப்ரபோ" என்பது தோராயமான அர்த்தம்.

January 04, 2011

(குட்டிக் குட்டி கிறுக்கல்கள் - 6 )

ஆக்கம்
______



ஆற்றல் பயன்பட ஆவதெல்லாம் நன்று
சீற்றம் கொண்டு சீவிச் சாய்க்காத
அழிவின் பாதையில் இட்டுச் செல்லாத
மானுடம் மலர நன்மைகள் சிறக்க
தேக்கம் கொள்ளாமல் தொடர்ந்து பெருக்கெடுத்து
அயராது சிந்தித்து தளராது செயல்பட்டு
ஆக்கத் துறைகளுக்கே ஊக்கம் தரும்
உயர்வாற்றாலை மட்டுமே பெருமைப் படுத்துவோம்.